திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அணுமின் நிலைய வளாகத்தில் சென்னை அணுமின் நிலையம், இந்திராகாந்தி அணு ஆராய்ச்சி மையம், பாபா அணு ஆராய்ச்சி மையம் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இயங்கி வருகிறது. இம் மையங்களில் அவசரகால தயார் நிலை திட்டத்தின்படி மையம் தாண்டிய அவசர நிலை ஒத்திகை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் தற்போது வருகின்ற 11ம் தேதி இந்த அவசர கால பாதுகாப்பு ஒத்திகை நடைபெற உள்ளது. இது சம்மந்தமான ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் கல்பாக்கம் அணுமின் நிலைய விருந்தினர் மாளிகையில் நடைபெற்றது. இதில், சென்னை அணுமின் நிலைய இயக்குனர் பலராமமூர்த்தி கலந்து கொண்டு பாதுகாப்பு அவசர நிலை ஒத்திகை குறித்தும், மாவட்ட நிர்வாகம் மற்றும் அணுமின் நிலையம் சார்பில் மேற்கொள்ளப்படவுள்ள நடவடிக்கைகள் குறித்தும் விளக்கங்கள் அளித்தார். மேலும், அவசர நிலை குழுவின் செயல் உறுப்பினர் ரவிசங்கர், கதிர்வீச்சு பாதுகாப்பு அதிகாரி ராஜகோபால், அணுமின் நிலைய அதிகாரிகள் சீனிவாசன், வரலட்சுமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.