சென்னை: பாண்டி பஜார் காவல் நிலையத்தில் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து புலனாய்வு பிரிவு ஆகிய காவல் நிலையங்கள் செயல்பட்டு வந்தன. இது பழமையான கட்டிடம் என்பதால் இதை இடித்து விட்டு புதிய கட்டிடம் கட்டுவதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளன. இதற்காக, போக்குவரத்து புலனாய்வு பிரிவு மற்றும் காவல் நிலையம் அசோக்நகர் காவல் நிலையத்திற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், நேற்று முன்தினம் அதிகாலை 4 மணிக்கு கனமழையுடன் காற்று வேகமாக வீசியதால் இந்த காவல் நிலையத்தில் இருந்த 100 வருட பழமையான தூங்கு மூஞ்சி மரம், காவல் நிலைய மேற்கூரை மற்றும் பக்கவாட்டு சுவரில் சாய்ந்தது. இதில், மேற்கூரை ஓடுகள், பறிமுதல் வாகனங்கள் சேதமடைந்தன. இந்த விபத்து அதிகாலை நடந்ததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் மரத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.