சென்னை: வங்கி கணக்கு முடக்கத்தை எதிர்த்து அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.வேலுமணியின் உறவினர் தாக்கல் செய்த மனுவை சென்னை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. எஸ்.வேலுமணியின் உறவினர் லோகநாதன் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், லஞ்சம் ஒழிப்புத்துறை முடக்கியுள்ள தனது வங்கி நடப்பு கணக்கில் ரூ.3.9 கோடியும், சேமிப்பு கணக்கில் ரூ.65 லட்சம் வைப்புத்தொகையும் உள்ளதாக கூறியுள்ளார்.
தனக்கும் முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கும் எதிரான வழக்கிற்கும் தொடர்பு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். தனது வங்கி கணக்கு முடக்கத்தை நீக்க வேண்டுமென்று லோகநாதன் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார். மனு நீதிபதி ஓம்பிரகாஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது கடந்த ஆகஸ்ட் 10 மற்றும் 11-ஆம் தேதி நடைபெற்ற சோதனையில் வருமானவரித்துறை அறிக்கை பெறப்பட்டு அதனடிப்படையிலேயே வங்கி கணக்கு முடக்கப்பட்டதாக லஞ்ச ஒழிப்புதுறை போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
கடந்த 2018-ம் ஆண்டு மனுதாரரின் மனைவியின் வங்கி கணக்கு மூலம் ரூ.69.67 கோடி பணப்பரிவர்த்தனை நடந்ததாக கூறப்பட்டது. மனுதாரரின் மனைவி எஸ்.வேலுமணியின் கூட்டாளி சந்திர பிரகாஷின் சகோதரி என்று சுட்டிக்காட்டப்பட்டது. இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மனுதாரரின் நிறுவனத்திற்கு டெண்டர் ஒதுக்கப்பட்டது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் கோரிக்கையை ஏற்க முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.