வருசநாடு : கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள கண்மாய் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்களும், விவசாயிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.கடமலை-மயிலை ஒன்றியத்தில் வருசநாடு பஞ்சம்தாங்கி கண்மாய், பெரியகுளம், செங்குளம், கெங்கன்குளம், கோவிலாங்குளம் கடமான்குளம், சிறுகுளம் கோவில்பாறை உள்ளிட்ட 12க்கும் மேற்பட்ட அரசுக்கு சொந்தமான கண்மாய்கள் உள்ளன. இந்த கண்மாய்கள் பொதுப்பணித்துறை, மயிலாடும்பாறை யூனியன் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இந்த கண்மாய்களை தனிநபர்கள் ஆக்கிரமித்து தென்னை, இலவமரம், கொட்டை முந்திரி, பலாமரம், எலுமிச்சை ஆகியவற்றை பல ஆண்டுகளாக பயிரிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், கண்மாய் ஆக்கிரமிப்பை அரசு சார்பில் அகற்றி, தூர்வாரி பலப்படுத்தும் பணி சில கண்மாய்களில் நடைபெற்று முடிந்தது. இப்பணியில் ஊராட்சித்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டனர். இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு வருசநாடு பஞ்சம்தாங்கி கண்மாயில் ஆக்கிரமிப்பு அகற்றும் பணி நடந்தது. இப்பணி பாதியில் நிறுத்தப்பட்டுள்ளது.
இது குறித்து வருசநாடு விவசாயி லோகேந்திரன் கூறுகையில், ‘கடமலை-மயிலை ஒன்றியத்தில் உள்ள அனைத்து கண்மாய்களையும் தூர்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும். மூல வைகை ஆற்றிலிருந்து நீரைக் கொண்டு வந்து கண்மாயில் நிரப்ப வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே இப்பகுதியில் குடிநீர் பஞ்சம் வராது. இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.