திருச்சி: 100 நாள் வேலை திட்டத்தில் கடந்த அதிமுக ஆட்சியில் ஊழல் நடந்துள்ளது என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஸ்ரீரங்கத்தில் நேற்று அளித்த பேட்டி: தமிழகத்தில் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தில் ரூ.246 கோடி ஊழல் நடந்து இருக்கிறது. கடந்த அதிமுக ஆட்சியில் இருந்தே இந்த ஊழல் நடந்துள்ளதாக அக்டோபர் மாதம் நடந்த கணக்கு தணிக்கையில் இது தெரிய வந்துள்ளது. ஊழல் செய்யப்பட்டதில் ரூ.ஒரு கோடியே 85 லட்சம் மட்டுமே தமிழக அரசால் மீட்கப்பட்டுள்ளது. விரைவாக அனைத்து பணத்தையும் மீட்க வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தில் தமிழகத்தில் குறைதீர்ப்பு அதிகாரி நியமிக்க வில்லை. உடனடியாக குறைதீர்ப்பு அதிகாரியை நியமிக்க வேண்டும். அந்த திட்டத்திற்கு போதுமான நிதி ஒதுக்கவில்லை என கூறுவது முற்றிலும் தவறானது. அந்த திட்டத்திற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.