போடி : போடி அருகே, சேறும், சகதியுமான மலைக்கிராம சாலையை, சீரமைக்க வேண்டும் என மலைக்கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். போடி அருகே, முந்தல் சாலையில் முனீஸ்வரன் கோயில் அருகே மேலபரவு மலைக்கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 35க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில், முந்தல் சாலையில் முனீஸ்வரன் கோயிலை தாண்டியவுடன், கொட்டக்குடி ஆறு செல்கிறது. மழை காலங்களில் வெள்ளம் வரும்போது, சாலையை கடக்க மலைக்கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். பல மணி நேரம் காத்திருந்து சாலையைக் கடக்க வேண்டியுள்ளது. இதனால், ஆற்றின் குறுக்கே பாலம் கட்டித்தரவேண்டும் என பொதுமக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக பெய்த மழையால், கொட்டக்குடி ஆற்றில் இருந்து மேலப்பரவு மலைக்கிராமத்துக்கு செல்லும் சாலை சேறும், சகதியுமாக உள்ளது. இதனால், மலைக்கிராமத்துக்கு செல்லும் மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே, கொட்டகுடி ஆற்றில் பாலம் அமைத்தும், மேலப்பரவு மலைக்கிராமத்துக்கு செல்லும் சாலையை சீரமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து மலைக்கிராம மக்கள் கூறுகையில், ‘கிராமத்துக்கு வரும் சாலை சேறும், சகதியுமாக இருப்பதால், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. தொகுதி எம்.எல்.ஏவும், முன்னாள் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம் 2 மாதத்திற்கு முன் வந்தபோது பாலம் அமைத்து, சாலையை சீரமைக்க கோரிக்கை விடுத்தோம். இது குறித்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்….
The post போடி அருகே சேறும், சகதியுமான மலைக்கிராம சாலை-சீரமைக்க குடியிருப்புவாசிகள் கோரிக்கை appeared first on Dinakaran.