×

புனித்ராஜ்குமார் சமாதியில் நடிகர் விஜய்சேதுபதி அஞ்சலி

பெங்களூரு : புனித்ராஜ்குமாரின் இறப்பு கன்னட திரையுலகிற்கு மட்டுமில்லாமல் ஒட்டு மொத்த திரையுலகிற்கு பேரிழப்பு என்று தமிழ்த்திரைப்பட நடிகர் விஜய்சேதுபதி கூறினார்.
கன்னட திரையுலகின் பவர் ஸ்டார் என்று பெருமையுடன் அழைக்கப்பட்ட புனித்ராஜ்குமார் கடந்த 29ம் தேதி மாரடைப்பால் காலமானர். அவரின் சமாதிக்கு திரையுலகை சேர்ந்த பலர் தினமும் வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அதன்படி நேற்று இரவு நடிகர் விஜய்சேதுபதி நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார். பின்னர், நிருபர்களிடம் அவர் கூறுகையில், ‘மறைந்த அப்பு என்னுடைய நல்ல நண்பராக இருந்தார். நான் அடிக்கடி அவருடன் செல்போனில் தொடர்பு கொண்டு பேசுவேன்.

அவர் இறந்த தகவல் மும்பையில் சூட்டிங்கில் இருந்தபோது தெரிந்தது. சந்தர்ப்ப சூழ்நிலையால் உடலுக்கு அஞ்சலி செலுத்த முடியாமல் போனது. அதனால் இன்று (நேற்று) சமாதிக்கு வந்து அஞ்சலி செலுத்தினேன். அப்பு உடல் பயிற்சி பெற்று திடமாக இருந்தார். அவருக்கு இந்த மரணம் வந்திருக்ககூடாது. வாழ்க்கையில் சாதிக்க வேண்டியவரை இயற்கை நம்மிடம் இருந்து பிரித்து விட்டது.

அப்பு தான் வாழ்ந்தபோது செய்துள்ள சேவைகள் அவர் மரணத்திற்கு பின் தான் வெளியில் தெரிகிறது. அந்தளவுக்கு சேவை செய்ததை விளம்பரம் செய்யாமல் இருந்துள்ளார். அவரின் மறைவு கன்னட திரையுலகிற்கு மட்டுமில்லாமல், ஒட்டுமொத்த திரையுலகிற்கும் மனிதநேயத்திற்கும் ஏற்பட்டுள்ள இழப்பாகும். அவரை இழந்து வாடும் மனைவி, பிள்ளைகள், சகோதரர்களுக்கு ஆறுதல் கூறுகிறேன்’ என்றார்.

Tags : Vijay Sethupathi ,Punithrajkumar ,Samadhi , Bangalore: Tamil film actor Vijay Sethupathi has said that the death of Punithrajkumar is a disaster not only for the Kannada film industry but for the entire film industry.
× RELATED திருட்டு பாடம் விஜய் சேதுபதி வௌியிட்ட டீசர்