×

பீதரில் 600 ஆண்டுகளாக தொடரும் பாரம்பரியம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆட்டுக்குட்டிகளுக்கு திருமணம்

பீதர் : மழை வேண்டி கழுதை, தவளை, ஓநாய் உள்ளிட்டவைகளுக்கு திருமணம் செய்வதை கேள்விப்பட்டுள்ளோம். ஆனால் தீபாவளி பண்டிகைக்காக ஆட்டுக் குட்டிகளுக்கு திருமணம் செய்து வைத்த நிகழ்வு நடந்துள்ளது. கர்நாடக மாநிலம், பீதர் மாவட்டம், பீதர் தாலுகாவில் உள்ள ஹவுராத் கிராமத்தில் கடந்த 600 ஆண்டுகளுக்கு முன் தீபாவளி பண்டிகை நாளில் ஆண், பெண் ஆட்டுக் குட்டிகளுக்கு திருமணம் செய்துவைக்கும் வைபவம் தொடங்கப்பட்டது. கடந்த 14ம் நூற்றாண்டில் மகாத்மா பொம்மகொண்டேஷ்வரசுவாமி தீபாவளி நாளில் ஆட்டுக் குட்டிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் வழக்கத்தை தொடங்கியதாக வரலாற்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

600 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட வழக்கத்தை கிராம மக்கள் இன்று வரை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். அதன்படி இவ்வாண்டு தீபாவளி நாளான நேற்று முன்தினம் கிராமத்தில் ஆட்டு குட்டிகளுக்கு திருமணம் நடந்தது. கிராமத்தை சேர்ந்த சிறுவர் முதல் முதியோர் வரை காலையில் எண்ணை வைத்து குளித்து விட்டு புத்தாடை அணிந்து கிராமத்தில் உள்ள தேவதை கோயில் திடலில் கூடினர். முதலில் கிராம தேவதைக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்பட்டது.

அதை தொடர்ந்து ஆண், பெண் ஆட்டுக் குட்டிகளை குளிப்பாட்டி புத்தாடை அணிந்து, மாலைகள் சூடி நெற்றியில் குங்குமம், திருநீரிட்டு அழைத்து வந்தனர். புரோகிதர்கள் ஆண் குட்டியின் வலது காலையும், பெண் குட்டியின் இடது காலையும் இணைத்து நூலால் கட்டினர். பின்னர் வேத-மந்திரங்கள் ஓதிய பின் நாதசுர ஓசையில் புரோகிதர் தாலி கட்டினார். இத்திருமணத்தில் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் என்று கிராம பஞ்சாயத்து உத்தரவிட்டதால் கிராமமே கோயில் வளாகத்தில் கூடியது.

ஆட்டுக் குட்டிகள் திருமணத்தை முன்னிட்டு ஹவுராத் கிராமம் விழாக்கோலம் பூண்டிருந்தது. கிராமத்தில் உள்ள அனைத்து தெருக்களிலும் மாவிலை தோரணங்கள் கட்டியும், விண்ண மின் விளக்கு அலங்காரத்தில் ஜொலித்தது. ஆட்டுக் குட்டிகள் திருமணத்தை காண ஹவுராத் கிராமத்தினர் மட்டுமில்லாமல் அக்கம்-பக்கம் கிராமத்தினரும் நூற்றுக்கணக்கில் கூடினர். திருமணத்தை முன்னிட்டு அறுசுவை விருந்து நடந்தது.

வடகர்நாடகாவில் காளைகள் மோதும் போட்டி

உழவு பணியில் விவசாயிகளுடன் சமமாக உழைப்பது காளைகள். அதை மகிழ்விக்கும் நோக்கத்தில் பொங்கல், யுகாதி போன்ற பண்டிகை காலங்களில் பசு, காளைகளுக்கு பூஜைகள் நடத்தி நன்றி தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்தில் பொங்கல் பண்டிகையின் போது ஜல்லிக்கட்டு, காளை வெள்ளோட்டம், மஞ்சு விரட்டு உள்ளிட்ட போட்டிகள் நடத்தப்படுகிறது. கர்நாடக மாநிலத்தின் கடலோர மாவட்டங்களில் கம்பளா என்ற பெயரில் காளை மற்றும் எருமைகள் ஓட்டம் நடத்தப்படுகிறது. கர்நாடகாவில் முக்கியமான கோயில் திருவிழாக்களில் சேற்றில் காளைகளுக்கு ஓட்ட பந்தயம் நடக்கிறது.

இந்நிலையில் வடகர்நாடக பகுதியில் உள்ள ஹுப்பள்ளி-தார்வார் மாவட்டங்களில் சில கிராமங்களில் தீபாவளி பண்டிகையின் போது காளைகள் சண்டை போட்டி நடத்தப்படுகிறது. 300 ஆண்டுகளுக்கும் மேலாக ஹுப்பள்ளி மாவட்டம் மற்றும் தார்வார் தாலுகாவில் உள்ள மனகுண்டி, மனசூரு, பாடா, தேவரஹள்ளி உள்பட 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் காளைகள் சண்டை போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படு, இந்தாண்டு தீபாவளியை முன்னிட்டு மேற்கண்ட கிராமங்களில் நேற்று முன்தினம் காளைகள் சண்டை போட்டி நடந்தது. இதில் 50க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றது. வெற்றி பெற்ற காளைகளுக்கு பரிசுகள் வழங்கினர். சிறப்பாக சண்டையிட்ட காளைகளுக்கும்  சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. இப்போட்டியை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர்.

Tags : Peter ,Diwali , Peter: We have heard of people marrying donkeys, frogs, and wolves for rain. But Deepavali
× RELATED பிரக்ஞானந்தாவின் பயிற்சியாளராக ரஷ்ய...