×

தங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதற்காக காவலர்களுக்கு வாரத்தில் ஒருநாள் ஓய்வு வழங்குவதற்கான அரசாணை வெளியீடு: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

சென்னை: காவலர்கள் தங்கள் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதற்காக வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்குவதற்கான அரசாணையை பிறப்பித்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்டுள்ள அரசு உத்தரவில் கூறி இருப்பதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் கடந்த 13-9-2021 அன்று நடந்த காவல் துறை மானிய கோரிக்கையின் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசுகையில், ‘காவலர்கள் தங்கள் உடல் நலனை பேணிக் காத்திட ஏதுவாகவும், தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்காகவும், இரண்டாம் நிலை காவலர்கள் முதல், தலைமை காவலர் வரையிலான காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கப்படும்’ என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பினை செயல்படுத்தும் விதமாக, காவலர்கள் தங்கள் உடல்நலனை பேணிக் காத்திட ஏதுவாகவும், தங்களது குடும்பத்தாருடன் போதிய நேரம் செலவிடுவதற்காகவும், இரண்டாம் நிலை காவலர்கள் முதல், தலைமை காவலர்கள் வரையிலான காவலர்கள் அனைவருக்கும் வாரத்தில் ஒரு நாள் ஓய்வு வழங்கிட முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று உத்தரவிட்டுள்ளார். அதற்கான அரசாணை 3ம் தேதி (நேற்று) பிறப்பிக்கப்பட்டுள்ளது. காவலர்களின் நலனை கருத்தில் கொண்டு, முதல்வர் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு, காவல் பணியில் இடையறாது ஈடுபட்டு, சவாலான பணிகளை எதிர்கொள்ளும் காவலர்களுக்கு அருமருந்தாக விளங்குவதோடு, புத்துணர்ச்சியோடும், உற்சாகத்தோடும் தங்கள் பணியினை அவர்கள் மேற்கொள்ள வழிவகுக்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : Chief Minister ,MK Stalin , Chief Minister MK Stalin orders government to give policemen one day off a week to spend time with their families
× RELATED முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின்...