ஆலங்காயம் : ஆலங்காயம் சுற்றுவட்டாரத்தில் தொடர்மழை பெய்வதால் சாலைகளில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால், கழிவுநீர் கால்வாய் அடைப்பை பொதுமக்களே சரி செய்கின்றனர். எனவே, அதிகாரிகள் நடவடிக்கை கோரிக்கை வைத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம், ஆலங்காயம் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக பகல் மற்றும் இரவு நேரங்களில் பரவலான மழை இருந்து வருகிறது.
தொடர் மழையின் காரணமாக, நகரின் முக்கிய பகுதிகள் மற்றும் சாலைகளில் தண்ணீர் ஆங்காங்கே தேங்கி நிற்பது, போக்குவரத்துக்கு இடைஞ்சலாக உள்ளது. மேலும் சாலை ஓரம் உள்ள கடைகள் மற்றும் வீடுகளின் முன்புற பகுதியில், கழிவு நீருடன் கலந்த மழை நீர் தேங்கி நிற்பதால், சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன் நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மேலும் அவ்வாறு தேங்கி நிற்கும் கழிவு நீர் கலந்த மழைநீரை, பொதுமக்களே வெளியெற்றுகின்றனர்.
இதுதவிர, கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்பை சரி செய்து, கழிவு நீரை வெளியேற்றி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கழிவுநீர் கால்வாய்களை சுத்தம் செய்து, மழைநீர் வெளியேற விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.