×

அரசு வேலை வாங்கி தருவதாக ஆசைகாட்டும் மோசடி கும்பலிடம் ஏமாற வேண்டாம்: போலீஸ் எஸ்பி வருண்குமார் வேண்டுகோள்

திருவள்ளூர்: மாவட்ட போலீஸ் எஸ்பி வருண்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: படித்து முடித்தபின் ஏதேனும் ஒரு அரசு வேலையில் சேர்வது என்பது பெரும்பாலான தற்போதைய இளைஞர்களின் தலையாய குறிக்கோளாக உள்ளது. அதற்காக பல இளைஞர்கள் பல வருட காலங்கள் இரவு பகலாக கடுமையாக படித்து, தமது விருப்பு வெறுப்புகளை தவிர்த்து முறையான வழியில் அரசு வேலை பெற முயன்று வருகின்றனர். அதேவேளையில், சில இளைஞர்கள் தாமாகவோ அல்லது அவர்களது பெற்றோர்களின் வற்புறுத்தலின்பேரிலோ குறுக்கு வழியில் அரசு வேலை பெற முயல்கின்றனர்.

அவர்களின் அந்த அரசு வேலை மோகத்தை சில மோசடி பேர்வழிகள் தங்களது சுயலாபத்திற்காக பயன்படுத்தி கொண்டு, அவர்களை வேலை வாய்ப்பு அலுவலகம் மற்ற பிற சமூகவலைதளங்கள் வாயிலாக இனம் கண்டு அவர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டி பணம் பறிக்கும் செயல்கள் தற்பொழுது சமூகத்தில் அதிகமாக காணப்படுகிறது. இவ்வாறு குறுக்கு வழியில் அரசு வேலை பெற பணம் கொடுத்து ஏமாந்த பலர் சமூகத்தில் தமது கவுரவத்தை எண்ணி புகார் கொடுக்க முன் வருவதில் தயக்கம் காட்டுகின்றனர்.

இவ்வாறான மோசடி பேர்வழிகளை கைது செய்து உரிய சட்ட நடவடிக்கை எடுக்காவிடில் அவர்கள் மேன்மேலும் பல நபர்களிடம் மோசடி செய்து, பல இளைஞர்களின் வாழ்க்கையை கேள்வி குறியாக்கி விடுவார்கள். எனவே இவ்வாறான அரசு வேலை வாங்கி தருவதாக உலாவரும் மோசடி பேர்வழிகளின் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க மாவட்டம் முழுவதும் ஆப்ரேஷன் ஜாப் ஸ்கேம் கிளீன் அப் எனும் சிறப்பு தேடுதல் வேட்டை அனுசரிக்கப்படவுள்ளது. அவ்வாறான பேர்வழிகளிடம் ஏமாற்றப்பட்ட நபர்கள் அதுபற்றி உடனடியாக நேரடியாக சந்தித்து புகார் அளிக்கலாம்.

அவர்கள் புகார்கள் மீது உடனடியாக வழக்கு பதிவு செய்து, மோசடி பேர்வழிகளை கைது செய்து பாதிக்கப்பட்ட நபர்கள் நிவாரணம் பெற உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், நேரடியாக வந்து புகார் அளிக்க இயலாத நபர்கள் திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்பியின் பிரத்யேக தொலைபேசி எண்.6379904848ஐ தொடர்பு கொண்டோ அல்லது வாட்ஸ்அப் மூலமாகவோ புகார் அளிக்கலாம். இளைஞர்கள் அரசு வேலை வாங்கி தருவதாக ஆசைகாட்டும் மோசடி கும்பலிடம் ஏமாற வேண்டாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது. 


Tags : SP ,Varunkumar , Don't be fooled by fraudulent gangs who want government jobs: Police SP Varunkumar
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்