×

முதல்வர் கடிதத்தின் மீது நடவடிக்கை எடுங்கள்; கிராமப்புற மக்களை வஞ்சிப்பதை நிறுத்துங்கள்! : மதுரை எம்.பி., சு. வெங்கடேசன்

சென்னை : நிதியின்றி ஊரக வேலைத் திட்டம் தவித்து வரும் நிலையில் ஒன்றிய அரசு  நிலுவைத்தொகையை விடுவிக்க கோரி மதுரை எம்.பி., சு. வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார்.இதுகுறித்து மதுரை நாடாளுமன்ற  உறுப்பினர் சு. வெங்கடேசன் ஒன்றிய கிராமப் புற மேம்பாடு மற்றும் வளர்ச்சி அமைச்சர் கிரிராஜ் சிங்கிற்கு   எழுதிய கடிதத்தில், மகாத்மா காந்தி ஊரக வேலைத் திட்டம் நாடு முழுக்க நிதியின்றித் தவிக்கிறது. 21 மாநிலங்களில் ஒன்றிய அரசு அனுப்பிய நிதி தீர்ந்து விட்டது. 15 கோடி மக்களுக்கு பசி தீர்க்கும் திட்டம் இது. கோவிட் காலத்தில் வாழ வழியின்றி சொந்த கிராமங்களுக்கு திரும்பிய மாநகர உழைப்பாளிகள் இன்னும் திரும்பி வரவில்லை. இதனால் ஊரக வேலைத் திட்டத்தையே அவர்கள் சார்ந்து இருக்க வேண்டியுள்ளது. ஏற்கெனவே இத் திட்டத்திற்கு ஒதுக்குகிற பட்ஜெட் தொகை போதுமான அளவில் இல்லை. கடந்த ஆண்டு 1.11 லட்சம் கோடி ரூபாய் செலவான நிலையில் இவ்வாண்டு பட்ஜெட்டில் 73000 கோடி மட்டுமே ஒதுக்கப்பட்டது. அப்போதே இடதுசாரிக் கட்சிகள் சுட்டிக் காட்டியும் அரசு செவி சாய்க்கவில்லை. அதன் விளைவே தற்போதைய நிதி நெருக்கடி. நாடு முழுக்க கண்டனக் குரல்கள் எழுந்த பின்புலத்தில் கூடுதல் ஒதுக்கீடு வழங்கப்படும் என்ற செய்திகள் வந்துள்ளன.
தமிழக முதல்வர் நேற்று கடிதம் எழுதி இருக்கிறார். தமிழ் நாட்டிற்கு ஒன்றிய அரசு தந்த ரூ 3524.69 கோடி செப்டம்பர் 15, 2021 அன்றே தீர்ந்து விட்டது. அதற்கு பிறகு ரூ 1178.12 கோடி நவம்பர் 1 வரை மேற்கொண்ட பணிகளுக்கான செலவினம் ரூ 1178.42 கோடி. அதற்கான நிதி உடனே தேவைப்படுகிறது; இதே நிலை நீடித்தால் வந்ததை விட இன்னும் அதிகமான மக்கள் நகரங்களை நோக்கி நகர்வார்கள் என்று முதல்வர் கூறி இருப்பது முற்றிலும் சரி. அது மிகப் பெரும் சமூகப் பிரச்சினையாக மாறும்.

இன்னும் நிதியாண்டு முடிய ஐந்து மாதங்கள் உள்ளன. இத்திட்டத்திற்கான நிதித் தேவையை மறு கணக்கீடு செய்யுங்கள். ஏற்கெனவே விழுந்துள்ள பள்ளம், இன்னும் எஞ்சி இருக்கிற மாதங்களுக்கான தேவைகளை கணக்கிற் கொண்டு கூடுதல் தொகைகளை உடன் அனுப்பி வைக்க வேண்டுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

Tags : Chief Minister ,Madurai ,Su. Venkatesh , மதுரை எம்.பி., சு. வெங்கடேசன்
× RELATED மதுரையில் இருந்து தனி விமானம் மூலம் கோவை புறப்பட்டார் ராகுல் காந்தி