நாகர்கோவில்: கல்லறைத் திருநாளையொட்டி கிறிஸ்தவர்கள் தங்களது முன்னோர்கள் நினைவாக அடக்கம் செய்யப்பட்ட கல்லறைகளை சுத்தம் செய்து மலர் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தி வருகின்றனர். ஆண்டுதோறும் நவம்பர் 2ம் தேதி கல்லறைத் திருநாள் கிறிஸ்தவர்களால் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி உயிரிழந்த தங்களது உறவினர்கள் மற்றும் முன்னோர்களுக்கு மலர் அஞ்சலி செலுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது.
அதன்படி நாகர்கோவில் ராமன்புத்தூரில் உள்ள கல்லறை தோட்டத்தில் ஏராளமானவர்கள் காலையிலேயே கல்லறைகளை சுத்தம் செய்து முன்னோர் நினைவாக மாலைகள் அணிவித்து மலர்கள் தூவி மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர். தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டில் உள்ள கல்லறை தோட்டத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள், முன்னோர்களுக்கு அஞ்சலி செலுத்த காலையிலேயே திரண்டனர். சிலர் தங்களது உறவினர்களின் ஆத்மா இளைப்பாறுவதற்காக கல்லறை முன்பே ஜெபித்தனர்.
கோவை மாவட்டத்தில் அனைத்து தேவலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பொதுமக்கள் தங்களது மூதாதையர்கள், உறவினர்களின் கல்லறைகளை சீரமைத்து மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தனை செய்தனர். சுங்கம், புளியகுளம் உள்ளிட்ட இடங்களில் உள்ள கல்லறை தோட்டம் உட்பட அனைத்து கல்லறை தோட்டங்களிலும் கூட்டம் அதிகம் காணப்பட்டது. சிலர் அன்னதானம் வழங்கினர். அருட்தந்தையர், போதகர்கள் பங்கேற்ற சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.