வருசநாடு அருகே, தர்மராஜபுரம் பகுதியில் மூல வைகையாறு உள்ளது. இப்பகுதி விவசாயிகள் தங்களது விளைபொருட்களை தேனி, ஆண்டிபட்டி, மதுரை உள்ளிட்ட ஊர்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். ஆனால், ஆற்றின் குறுக்கே பாலம் கட்டப்படவில்லை. இதனால், விவசாயிகள் விளைபொருட்களை கொண்டு செல்வதில் சிரமமடைந்து வருகின்றனர். குறிப்பாக மழைக்காலங்களில், செல்வராஜபுரம் பகுதி விவசாயிகள் தங்களது விவசாய பொருட்களை, பசுமலைத்தேரி சிங்கராஜபுரம் வழியாக சுமார் 7 கிமீ தூரத்துக்கு சுற்றி செல்கின்றனர்.
இதனால், கால விரயம் ஏற்படுவதுடன், போக்குவரத்து செலவும் அதிகரித்து விடுகிறது. பாலம் கட்ட கோரி வருசநாடு ஊராட்சி, கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பொதுமக்கள் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இது குறித்து தர்மராஜபுரம் ஒன்றிய கவுன்சிலர் ஆயுதவள்ளி மணிமாறன் கூறுகையில், ‘பாலம் கட்டி தருவதுடன், அடிப்படை வசதிகளை செய்து தர மாவட்ட நிர்வாகம் முன்வர வேண்டும்’ என்றார்.