×

அரசின் பணம் சரியாக சென்றடையும் வகையில் நிதித்துறையில் புதிய விதிமுறை: அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேட்டி

சென்னை: அரசின் பணம் பயனாளிகளுக்கு சரியாக சென்றடையும் வகையில், நிதித்துறையில் புதிய விதிமுறையை கொண்டுவர உள்ளதாக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார். சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வரவு செலவுத் திட்ட உரை 2021-22ல் அறிவிப்புகளை வெளியிட்டு பேசியதாவது: கருவூல அமைப்புகளின் கண்காணிப்புக்கு வெளியேயுள்ள வங்கிக் கணக்குகளுக்கு அரசு நிதிகள் அடிக்கடி மாற்றப்படுவதாகப் பல்வேறு தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இதை கண்டறிய இரட்டைக் கணக்கெடுப்பு முறை ஒன்று தொடங்கப்பட்டது.  

இந்த கணக்குகளை சரி செய்ய நிதித்துறையின் மூத்த அதிகாரியின் கீழ் ஒரு சிறப்பு பணிக்குழுவை அரசு அமைக்கும். அரசுத்துறைகள், அரசால் நடத்தப்பெறும் சங்கங்கள், அரசு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றால் கருவூலத்திற்கு வெளியே இருப்பில் வைக்கப்பட்டிருந்த நிதியைக் குறிப்பிட்ட காலவரையறைக்குள் கண்டறியவும் பிறகு சரிபார்த்து அவற்றை அரசுப் பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் ஒரு சிறப்புக்குழு அமைக்கப்பட்டது. முடிவுற்ற திட்டங்கள், நடப்புத் திட்டங்கள் மற்றும் துறையின் வருவாயினங்கள் ஆகிய ஒவ்வொன்றின் கீழும் தனித்தனியாக செய்யப்பட்டுள்ளது.

இத்தகைய முறையைக் கையாண்டு, இதுவரை திரட்டப்பட்ட தரவுகளைக் கொண்டு சிறப்புக் குழுவானது அரசுக் கணக்கில் உடனடியாக திருப்பிச் செலுத்தத்தக்கதாக ரூ.1946.31 கோடியை இனம் கண்டுள்ளது. இதன்மூலம் அரசுக் கருவூலத்தில் செலுத்திட தக்க, பயன்படுத்தப்படாத கூடுதல் நிதிகளையும் கண்டறிவதற்கான சாத்தியக்கூறும் உள்ளது.  இப்பணியை மேற்கொள்ள சிறப்புக்குழுவுக்கு மார்ச் 31, 2022 வரை காலநீட்டிப்பு வழங்கப்படுகிறது. வழங்கப்பட்ட நிதி, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பயன்படுத்தப்படா விட்டால், அவை அப்படியே முழுமையாக அரசுக்கணக்கில் சேர்க்கப்பட்டுவிடும்.

அரசிடம் உள்ள தகவல்களை தீட்டி ஒன்றிணைத்ததன் மூலம் பயிர்கடனில் உள்ள குளறுபடிகள் தெரியவந்தது. நகைக்கடன் தள்ளுபடியில் பல தகவல்கள் பெறப்பட்டு தவறான முறையில் கடன் பெற்றவர்களுக்கு செல்லவேண்டிய பணம் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. பிறப்பு, இறப்பு பதிவை வைத்து ஆய்வு செய்யும் போது பலர் மறைந்தவர்கள் பெயரில் ஓய்வூதியம் இன்னும் சென்றுகொண்டே இருக்கிறார்கள். மறைந்தவர்கள் பெயரில் இலவச அரிசியும் சென்று கொண்டிருக்கிறது என்பது கண்டறியப்பட்டுள்ளது. இதுபோன்ற அனைத்து பிரச்னைகளுக்கும், இந்த புதிய அணுகுமுறையின் மூலமாக  திறம்பட தீர்வு காணப்படும்.  

பிழைகளைக் குறைத்து, தேவையில்லாத செலவுகளைக்  குறைக்க அரசு தொடர்ந்து பாடுபடும். நிதியை வீணாக செலவு செய்யக்கூடாது. தவறான நபர்களுக்கு திட்டங்களும், பணமும் செல்வது தடுக்கப்பட்டுள்ளது. எனவே, முதல்வரின் உத்தரவை பெற்று  இந்த ஆண்டில் இருந்து நிதித்துறையில் ஒரு புது விதிமுறையை கொண்டுவர இருக்கிறோம். வாரியமோ அல்லது அரசு துறையோ எதாவது ஒரு காரணத்திற்காக பணத்தை பெற வேண்டும் என்றால் நிதித்துறையின் ஒப்புதல் இல்லாமல் பெற முடியாது என்ற விதிமுறையை கொண்டுவர இருக்கிறோம்.  இவ்வாறு கூறினார்.

Tags : Minister Palanivel Thiagarajan , New rules in finance to ensure proper disbursement of government money: Interview with Minister Palanivel Thiagarajan
× RELATED இந்தியாவில் வடகொரியாவின்...