மெல்போர்ன்: இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் ஆஸ்திரேலியா வருவதற்கு அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது.ஆஸ்திரேலியாவில் கொரோனா பரவல் காரணமாக கடந்த 20 மாதங்களாக சர்வதேச விமான போக்குவரத்துக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், கொரோனா தொற்று குறையத் தொடங்கியதை அடுத்து அங்கு படிப்படியாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதன்படி, ஆஸ்திரேலியாவுக்கு வரும் சர்வதேச பயணிகளுக்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தியாவின் கோவாக்சின் மற்றும் சீனாவின் பிபிஐபிபீ-கோர்வி தடுப்பூசி செலுத்திய பயணிகள் எவ்வித கட்டுப்பாடுமின்றி ஆஸ்திரேலியாவுக்கு பயணிக்கலாம் என அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.
இந்த தடுப்பூசிகளின் பாதுகாப்பு, தரம் குறித்து ஆய்வு செய்த ஆஸ்திரேலிய அரசு இதற்கு அனுமதி அளித்துள்ளது. கோவாக்சின் செலுத்திய 12 வயதுக்கு மேற்பட்டோர் அனைவரும், பிபிஐபிபீ-கோர்வி தடுப்பூசி செலுத்திய 18 முதல் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் தடையின்றி பயணிக்கவும், கட்டாய தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படமாட்டார்கள் என ஆஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது.