தமோ: மத்திய பிரதேசத்தில் மாணவிகளை அறைக்கு அழைத்து சென்று போதையில் ஆட்டம் போட்ட தலைமை ஆசிரியர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். மத்திய பிரதேசத்தின் தமோ மாவட்டத்துக்கு உட்பட்ட மதியாடோ கிராமத்தில் அரசு நடுநிலைப்பள்ளி பள்ளியின் தலைமை ஆசிரியரான ராஜேஷ் முண்டா கடந்த 29ம் தேதி மது அருந்தி விட்டு பள்ளிக்கு வந்தார். போதையில் இருந்த அவர், சில மாணவிகளை ஒரு அறைக்கு அழைத்து சென்றார். பின்னர் அவர்களை தன்னுடன் நடனமாட கட்டாயப்படுத்தியதுடன், அவரும் நடனமாடினார். அத்துடன் அந்த நிகழ்வுகளை அவர் வீடியோ பதிவாகவும் எடுத்துக்கொண்டார்.
அதிர்ச்சியடைந்த மாணவிகள் தங்கள் பெற்றோரிடம் இதுகுறித்து கூறினர். அதையடுத்து மாவட்ட கல்வி அதிகாரியிடம் மாணவிகளின் பெற்றோர் புகார் செய்தனர். கல்வி அதிகாரிகள் விசாரணை நடத்தி அதன் அறிக்கையை மூத்த அதிகாரிகளிடம் சமர்பித்தனர். தொடர்ந்து தலைமை ஆசிரியர் ராஜேஷ் முண்டாவை பணியிடை நீக்கம் செய்து முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டார். தலைமை ஆசிரியரே மது போதையில் மாணவிகளை நடனமாட கட்டாயப்படுத்திய சம்பவம் மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.