×

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு!: விழுப்புரம் நீதிமன்றத்தில் முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் நேரில் ஆஜர்..!!

விழுப்புரம்: பாலியல் வழக்கில் நீதிபதியின் எச்சரிக்கையை தொடர்ந்து முன்னாள் சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் விழுப்புரம் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார். கடந்த அதிமுக ஆட்சியில் முதலமைச்சரின் பாதுகாப்புக்கு சென்ற இடத்தில் பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக அப்போதைய சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் மீது சி.பி.சி.ஐ.டி. போலீஸ் வழக்குப்பதிவு செய்தது. குற்றத்திற்கு உடந்தையாக இருந்ததாக முன்னாள் செங்கல்பட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கண்ணன் மீதும் வழக்கு பாய்ந்தது. விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையில் உள்ளது.

வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றக்கோரிய ராஜேஷ் தாஸின் கோரிக்கையை உயர்நீதிமன்றம் நிராகரித்தது. இதனிடையே விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வந்த ராஜேஷ் தாஸ் மீது பிடியாணை பிறப்பிக்கப்படும் என கடந்த முறை விழுப்புரம் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்நிலையில், வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது ராஜேஷ் தாஸ் நேரில் ஆஜராகி தன்னுடைய தரப்பு விளக்கங்களை அளித்தார். பாலியல் வழக்கில் தொடர்புடைய செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி. கண்ணனும் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளனர்.

Tags : DGP ,Villupuram ,Rajesh Das , Sex, Villupuram Court, DGP Rajesh Das
× RELATED பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்த...