சென்னை: சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த் முழு உடல்நலம் பெற்று வீடு திரும்பியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் திடீர் மயக்கம் காரணமாக கடந்த வியாழக்கிழமையன்று சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவ நிபுணர்கள் பரிசோதனையில் அவரது இதயத்தில் இருந்து மூளைக்கு செல்லும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டிருந்தது தெரிய வந்தது.
இதற்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்ட பிறகு அவரது உடல்நிலை வேகமாக முன்னேறி வந்தது. முழுமையாக உடல்நலம் தேறிய நடிகர் ரஜினிகாந்த் இரவு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். 4 நாட்கள் சிகிச்சைக்கு பிறகு பூரண நலம்பெற்று வீடு திரும்பிய நடிகர் ரஜினிகாந்திற்கு அவரது வீட்டு வாயிலில் மனைவி லதா ஆரத்தி எடுத்து உள்ளே அழைத்து சென்றார். இதனை தொடர்ந்து தான் நலமுடன் இருப்பதாகவும் தமக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் நன்றி என்றும் கூறி ஹூட் செயலியில் குரல் பதிவு மூலம் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.