×

நீட் மோசடி கும்பலுடன் 25 மாணவர்கள் தொடர்பு தேர்வு முடிவை நிறுத்த கோரிக்கை: உபி.யில் அதிரடி திருப்பம்

லக்னோ: நீட் தேர்வு மோசடி கும்பலுடன் தொடர்புடைய 25 மாணவர்களின் தேர்வு முடிவை நிறுத்தி வைக்கும்படி, தேசிய தேர்வு முகமையிடம் உபி போலீசார்  வலியுறுத்தி உள்ளனர். மருத்துவ படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும் கடந்த செப்டம்பர் மாதம் நடந்தது. இதில், சில வடமாநிலங்களில் ஆள்மாற்ற மோசடிகள் நடப்பது கண்டறியப்பட்டது. உத்தரப் பிரதேச மாநிலம், வாரணாசியில் ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியதாக பல் மருத்துவம் 2ம் ஆண்டு படிக்கும் மாணவி மற்றும் அவரது தாயாரை போலீசார் கைது செய்தனர். திரிபுராவை சேர்ந்த ஒருவரின் மகனுக்காக, ஆள்மாறாட்டம் செய்து அந்த மாணவி தேர்வை எழுதி உள்ளார். இதற்காக அவருக்கு ரூ.5 லட்சம் பணம் தரப்பட்டுள்ளது.

இந்த மோசடியில் ஒரே கும்பல் செயல்படுவதை போலீசார் விசாரணையில் கண்டறிந்தனர். கடந்த ஓரிரு ஆண்டுகளில் நன்கு படித்து நீட் தேர்வில் வெற்றி பெற்ற ஏழை மாணவ, மாணவிகளை குறிவைத்து அவர்களுக்கு பணத்தாசை காட்டி, ஆள்மாற்றாட்டம் செய்து தேர்வு எழுத வைத்துள்ளனர்.
அந்த கும்பலின் தலைவன், பீகார் மாநிலம், பாட்னாவை சேர்ந்த பிரேம் குமார் என்பவனை வாரணாசி போலீசார் கைது செய்தனர். அவனிடம் நடத்திய விசாரணையில் தற்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இவர்கள் ஒரு மாணவனுக்கு மட்டும் ஆள்மாறாட்டம் செய்யவில்லை. உபி.யிலேயே 25 மாணவர்கள் இந்த மோசடியில் சம்மந்தப்பட்டு இருப்பதான வலுவான ஆதாரங்கள் தற்போது சிக்கி உள்ளன. அவர்களின் விவரங்கள் அனைத்தையும், தேசிய தேர்வு முகமைக்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.

அவர்களின் நீட் தேர்வு முடிவை மட்டும் நிறுத்தி வைக்க வேண்டுமென வலியுறுத்தி உள்ளனர். மேலும், இந்த கும்பல் வெளிமாநிலங்களில் எங்கெல்லாம் கைவரிசை காட்டியிருக்கிறது என்பது குறித்தும் தீவிர விசாரணை நடக்கிறது.

ராஜஸ்தானில் பலே கும்பல்
உபி.யை போலவே ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரில் ஆள்மாற்றம் செய்து நீட் தேர்வு எழுதியதாக ஒரு கும்பல் கடந்த செப்டம்பரில் கைதானது. நாக்பூரை சேர்ந்த நீட் பயிற்சி மையம் நடத்தும் உரிமையாளரே இந்த மோசடியில் ஈடுபட்டுள்ளார். ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுத, ஒரு மாணவனுக்கு ரூ.50 லட்சம் வரை பணம் வாங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த கும்பலுக்கும் உபி கும்பலுக்கும் தொடர்புள்ளதா என்பது குறித்தும் போலீசார் விசாரணையை முடுக்கி உள்ளனர்.

Tags : NEET , Need fraud, students, exam results, demand
× RELATED நீட் தேர்வை மாநில அரசுகளின்...