திருவனந்தபுரம்: சபரிமலை ஐயப்பன் கோயிலில் இந்த வருடத்துக்கான மண்டல கால பூஜைகள் வரும் 16ம் தேதி தொடங்குகிறது. இதற்காக முந்தைய நாள் (15ம் தேதி) மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. அன்று மாலையே சபரிமலை, மாளிகைபுரம் கோயில் புதிய மேல்சாந்திகள் பொறுப்பேற்கிறார்கள். மறுநாள் முதல் புதிய மேல்சாந்திகள் தான் கோயில் நடையை திறப்பார்கள். 41 நாள் நீளும் மண்டல காலம், டிசம்பர் 26ம் தேதி மண்டல பூஜையுடன் நிறைவடையும். அதைத் தொடர்ந்து, மகரவிளக்கு பூஜைகளுக்காக டிசம்பர் 30ம்தேதி மீண்டும் நடை திறக்கப்படும். இந்த நிலையில் மண்டல, மகர விளக்கு பூஜைகளை முன்னிட்டு பக்தர்களுக்கு செய்ய வேண்டிய வசதிகள் குறித்து, தேவசம் போர்டு அமைச்சர் ராதாகிருஷ்ணன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
பின்னர், அவர் அளித்த பேட்டியில், ‘‘மண்டல, மகரவிளக்கு காலத்தில் தினமும் 25 ஆயிரம் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். மொத்தம் 15.25 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதி கிடைக்கும். ஆன்லைன் முன்பதிவு ஏற்கனவே தொடங்கி விட்டது. இதுவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இந்த வருடமும் பெரிய பாதை வழியாக பக்தர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். கடந்த 2 வருடங்களாக இந்த பாதையில் பக்தர்கள் செல்லாததால் வன விலங்குகள் அதிகமாக காணப்படுகிறது. பக்தர்களுக்கு பம்பை ஆற்றில் குளிக்க அனுமதியில்லை. இந்த வருடமும் சன்னிதானத்தில் பக்தர்கள் தங்க அனுமதி இல்லை. பக்தர்கள் நெய் அபிஷேகம் நடத்தலாம்,’’ என்றார்.
2 டோஸ் தடுப்பூசி
* சபரிமலை வரும் பக்தர்கள், ஊழியர்கள், போலீசார் உள்பட அனைவரும் 2 டோஸ் கொரோனா தடுப்பூசி 2 டோஸ் போட்டிருக்க வேண்டும். அல்லது 72 மணி நேரத்திற்குள் ஆர்டிபிசிஆர் நெகட்டிவ் சான்றிதழ் எடுத்திருக்க வேண்டும்.
* கொரோனா வந்து குணமாகி 3 மாதம் ஆகாதவர்கள் சபரிமலை பயணத்தை தவிர்க்க வேண்டும்.
* பம்பை முதல் சன்னிதானம் வரை முக்கிய இடங்களில் இதய சிகிச்சை மையங்கள் ஏற்படுத்தப்படும். சன்னிதானத்தில் அவசர அறுவை சிகிச்சை மையம் திறக்கப்படும்.