சென்னை: கன்னட நடிகர் புனித் ராஜ்குமார், நேற்று முன்தினம் மாரடைப்பால் உயிரிழந்தார். இவர், நல்ல உடற்கட்டுடன் இருந்தார். தினமும் பல மணி நேரம் உடற் பயிற்சி செய்துள்ளார். உடற்பயிற்சியின்போதுதான், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. குறைந்த வயதில் மாரடைப்பு ஏற்படுவது ஏன் என்பது குறித்து இதய அறுவை சிகிச்சை நிபுணர் கூறியுள்ளார். இது குறித்து அரசு மருத்துமனை முன்னாள் இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் பி.மூர்த்தி கூறுகையில்: உடற்பயிற்சி மேற்ெகாள்பவர்களுக்கு தான் மரடைப்பு வரும் என்பது இல்லை. நடைபயிற்சி, நீச்சல் பயிற்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு கூட மாரடைப்பு வருகிறது.
எனவே மாரடைப்பு என்பது எங்கு வேண்டுமானாலும், எப்போது வேண்டுமானாலும் வரலாம். அதற்கு நிறைய காரணங்கள் உள்ளது. எனவே உடற்பயிற்சியினால் தான் வந்தது என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. மேலும் 35 வயதுக்கு மேற்ப்பட்டவர்கள் அனைவரும் இதய பிரச்னை, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற நோய்கள் உள்ளதா என்று சோதனை செய்து கொள்ள வேண்டும். அப்படி ஏதாவது பிரச்னைகள் இருந்தால் உடற்பயிற்சி செய்யும்போது மாரடைப்பு வரலாம்.
அப்படி இல்லாத பட்சத்தில் மனஉளைச்சலால் கூட மாரடைப்பு வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. மேலும் இரவு தூங்காமல் இருந்து விட்டு காலையில் உடல் சோர்வாக இருக்கும் போது கடினமான உடற்பயிற்சியும் செய்யக் கூடாது. மனஉளைச்சல் மற்றும் உடல்சோர்வுடன் கடினமான உடற்பயிற்சி செய்தால் மாரடைப்புக்கு முக்கிய காரணமாகும். எனவே உடற்பயிற்சி மேற்கொள்பவர்கள் உடல் சோர்வுடன் உடற்பயிற்சியை செய்யக்கூடாது. மாரடைப்பு வந்தால் உடனே மருத்துவமனைக்கு அழைத்து கொண்டு செல்ல வேண்டும் அது தான் சிறந்தது.இவ்வாறு அவர் கூறினார்.