இட்டாநகர்: அருணாச்சல பிரதேசத்தில் பாயும் நதியில் சீனா கழிவை கலக்கவிட்டதால், மீன்கள் செத்து கிடந்தன. இதனால், எல்லையில் திடீர் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியா - சீனா எல்லையில் உள்ள மாநிலங்களான அருணாச்சலப் பிரதேசம், சிக்கிம் ஆகியவற்றில் சீன ராணுவம் தொடர்ச்சியாக கிராமங்களுக்குள் சட்ட விரோதமாக நுழைவது, அங்குள்ள மக்கள் வாழும் இடங்களில் ராணுவ அணிவகுப்புகள் நடத்துவது எனத் தொடர்ந்து இந்திய நிலப்பரப்புக்கு அச்சுறுத்தலாக மாறி வருகிறது. இந்நிலையில், அருணாச்சல பிரதேசத்தில் பாயும் காமெங் நதி கிழக்கு காமெங் மாவட்டத்தில் உள்ளது.
நதியின் நீர் கருப்பு நிறமாக மாறியதோடு நதியில் ஆயிரக்கணக்கில் மீன்கள் செத்துக் கிடக்கின்றன. அந்த மீன்களை பொது மக்கள் யாரும் சமைக்க எடுத்துச் செல்ல வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். நதியில் ஏதோ ஒன்று அதிகளவில் கலக்கப்பட்டதால், இந்த மாதிரியாக நதியின் நிறம் மாறியிருக்கிறது என பரிசோதனை மேற்கொண்ட அதிகாரிகள் கூறியுள்ளனர்.
ஒரு லிட்டர் தண்ணீரில் 300 முதல் 1200 மில்லி கிராம் வரையிலேயே டிடிஎஸ் இருக்க வேண்டும். ஆனால் கெமாங் நதியில் ஒரு மில்லி கிராமில் 6,800 கிராம் டிடிஎஸ் இருப்பதாக மாவட்ட மீன் வளர்ச்சிக் கழக அலுவலர் ஹலி தாஜோ தெரிவித்துள்ளார்.
ஆனால், கிராமவாசிகளோ இது சீனாவின் சதிச் செயல் எனக் கூறுகின்றனர். அருணாச்சல எல்லையை ஒட்டிய பகுதியில் சீனா கட்டுமானங்கள் அதிகளவில் செய்து வருவதால் நதிநீர் மாசுடைவதாகக் கிராமவாசிகள் கூறுகின்றனர். இவ்விவகாரம் குறித்து எல்லைப் பாதுகாப்பு படை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.