×

செந்துறை பகுதியில் தொடர் மழையால் பூசணிக்காய் சாகுபடி பாதிப்பு: விவசாயிகள் வேதனை

செந்துறை: செந்துறை அருகே பயிரிடப்பட்ட பூசணிக்காய், பரங்கிக்காய் தொடர் மழை காரணமாக அழுகி வருகிறது. ஏற்கனவே விலை குறைவு காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மேலும் அதிக இழப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள இராயம்புரம், பொட்டவெளி, அகரம், வெள்ளூர், சென்னிவனம், காவேரிப்பாளையம், மேட்டுப்பாளையம், பொய்யாதநல்லூர் பகுதிகளில் அதிகளவில் பூசணிக்காய் மற்றும் பரங்கிக்காய் விவசாயம் செய்யப்பட்டுள்ளது.

இதற்கு ஏர் உழுவது, உரம், விதை, மருந்து என ஏக்கருக்கு ரூ.20 ஆயிரத்திற்கு மேல் செலவாகிறது. இந்நிலையில் பருவமழை காரணமாக பூசணிக்காய் பிஞ்சுகள் அழுகி வருகின்றது. ஏற்கனவே ஆயுத பூஜைக்கு அறுவடை செய்த பூசணிக்காய் கிலோ ரூ.1.50 முதல் ரூ.2 வரையிலும், பரங்கிக்காய் 75 பைசா முதல் ரூ.1.25 வரை கொள்முதல் செய்யப்பட்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் கிலோ 14 வரை விற்பனை செய்யப்பட்டது.

சென்ற ஆண்டு 6 ரூபாய் விற்ற பூசணிக்காய் இந்தாண்டு 2 ரூபாய்க்கு விற்பனை செய்ததில் விவசாயிகளுக்கு அதிக இழப்பு ஏற்பட்ட நிலையில் தற்போது பெய்து வரும் மழையால் மீதமுள்ள பிஞ்சுகள் அழுகி வருவது மேலும் இழப்பை ஏற்படுத்தும் என விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர்.  மேலும், மக்காச்சோளம், நெல் மற்றும் பருத்திக்கு இழப்பீடு வழங்குவது போல் பரங்கி, பூசணிக்காய் பயிர் செய்பவர்களுக்கும் இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sendurai , Sendurai, farmers
× RELATED செந்துறையில் டீக்கடையில் காஸ் கசிவு