பொங்கலூர்: பொங்கலூர் அருகே பிஏபி கால்வாயில் தோழிகளுடன் விளையாடிய போது வழுக்கி விழுந்த சிறுமி தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டார். அவரை காப்பாற்ற தண்ணீரில் குதித்து தத்தளித்த 4 சிறுமிகளை லாரி டிரைவர் காப்பாற்றினார். திருப்பூர் மாவட்டம் பொங்கலூரை அடுத்த வளையபாளையத்தை சேர்ந்தவர் சுப்பிரமணி (48). விவசாய கூலி தொழிலாளி. இவரது மகள் சகுந்தலா (14). வளையபாளையம் அரசு பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் சகுந்தலா தனது தோழிகள் இந்திராணி, யோகலட்சுமி, மகாராணி உட்பட 4 பேருடன் புத்தரிச்சல் அருகே உள்ள சோழீஸ்வரர் கோயிலுக்கு நேற்று சென்றார். பின்னர் வீடு திரும்பியபோது புத்தரச்சல் அருகே உள்ள பிஏபி கால்வாயில் 5 பேரும் விளையாட சென்றனர். அப்போது சகுந்தலா திடீரென வழுக்கி கால்வாய் தண்ணீரில் விழுந்துள்ளார். இதை பார்த்த அவரது தோழிகள் அனைவரும் சகுந்தலாவை காப்பாற்ற நீரில் குதித்தனர். 5 பேரும் நீரில் தத்தளிப்பதை பார்த்த அப்பகுதி பொதுமக்கள் அவர்களை காப்பாற்ற முயன்றனர். லாரி டிரைவர் ஒருவர் கால்வாயில் குதித்து சிறுமிகளை காப்பாற்ற முயன்றார்.
அப்போது அங்கிருந்த பெண் ஒருவர் தனது சேலையை வீசி அவர்களுக்கு உதவினார். சேலையை பற்றிக் கொண்ட லாரி டிரைவர் இந்திராணி, யோகலட்சுமி, மகாராணி உட்பட 4 சிறுமிகளையும் காப்பாற்றினார். ஆனால் சகுந்தலாவை மீட்க முடியவில்லை. பொதுமக்கள் தேடி பார்த்தபோது அவர் கிடைக்கவில்லை. நீரில் அடித்து செல்லப்பட்டிருக்கலாம் என தெரியந்தது. இதையடுத்து பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு வந்த காமநாயக்கன்பாளையம் போலீசார் மற்றும் பல்லடம் தீயணைப்பு துறையினர் பொதுமக்கள் உதவியுடன் சகுந்தலாவை தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். இரவானதால் தேடுதல் பணி கைவிடப்பட்டது. இன்று மீண்டும் தேடுதல் பணி நடக்க உள்ளது. சிறுமிகள் நீரில் அடித்து செல்லப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.