×

இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கு சிறப்பு ஐஏஎஸ் அதிகாரி நியமனம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை: தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கு சிறப்பு அதிகாரியாக இளம்பகவத் ஐஏஎஸ் அதிகாரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும் 7 ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:  திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சப்-கலெக்டர் ஆனந்த் மோகன், கோவை வணிக வரிகள் இணை கமிஷனராக (மாநில வரிகள்) மாற்றப்பட்டுள்ளார். கோவை வணிக வரிகள் இணை கமிஷனர் (மாநில வரிகள்) ஐ.எஸ்.மெர்சி ரம்யா, சென்னை வணிக வரிகள் இணை கமிஷனராக (நுண்ணறிவு பிரிவு -1) மாற்றப்பட்டு உள்ளார்.

 தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண்மை இயக்குனர் மற்றும் திட்ட இயக்குனர் கே.இளம்பகவத், தமிழகத்தில் செயல்படுத்தப்பட்டுள்ள ‘இல்லம் தேடி கல்வி’ திட்டத்தின் சிறப்பு பணி அதிகாரியாக (பள்ளிக்கல்வி ஆணையர் அலுவலகம்) மாற்றப்பட்டு உள்ளார்.
 புதுக்கோட்டை சப்-கலெக்டர் எஸ்.பாலசந்தர், மின் ஆளுமை இணை இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அவர் தமிழ்நாடு மின் ஆளுமை முகமையின் இணை தலைமை செயல் அதிகாரியாகவும் செயல்படுவார்.  

ஓசூர் சப்-கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, ‘சிப்காட்’ நிறுவன செயல் இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார். ஊட்டி சப்-கலெக்டர் மோனிகா ராணா, ஊட்டி மலை பகுதி மேம்பாட்டு திட்ட இயக்குனராக மாற்றப்பட்டார். நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி சப்-கலெக்டர் வி.சிவகிருஷ்ணமூர்த்தி தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய இணை மேலாண்மை இயக்குனர் மற்றும் திட்ட இயக்குனராக இடமாற்றம் செய்யப்பட்டார்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Tags : Home Search Education, Special IAS, Officer, Government of Tamil Nadu
× RELATED பணம் கொடுத்து ஆட்களை அழைத்துச்சென்று...