புதுடெல்லி: செபி தலைவர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ஒன்றிய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது. பங்குச் சந்தை ஒழுங்குமுறை அமைப்பான ‘செபி’யின் தற்போதைய தலைவராக 1984ம் ஆண்டு பிரிவு ஐஏஎஸ் அதிகாரியான அஜய் தியாகி பதவியில் இருக்கிறார்.
இவர், கடந்த 2017 மார்ச் முதல் இப்பதவியில் நீடிக்கிறார். அவரது மூன்றாண்டு பதவிக் காலம் இந்தாண்டு பிப்ரவரியுடன் முடிய இருந்த நிலையில், முதலில் 6 மாதங்களும், பிறகு 18 மாதங்களும் நீட்டிக்கப்பட்டன.
தற்போது, அவருடைய பதவிக் காலம் முடிய உள்ளதால், இப்பதவிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக நிதியமைச்சகத்தின் பொருளாதார விவகாரத் துறை தெரிவித்துள்ளது. அது வெளியிட்ட அறிக்கையில், `தகுதி உடைய விண்ணப்பதாரர்கள் தேவையான ஆவணங்களுடன் குறிப்பிடப்பட்ட, முறையான வழியில் வரும் டிசம்பர் 6, 2021 அல்லது அதற்கு முன்பாக விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். முறையாக நிரப்பப்படாத மற்றும் கடைசி தேதிக்கு பிறகு வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது,’ என்று கூறப்பட்டுள்ளது.