ஸ்ரீநகர்: உலகிலேயே முதல் முறையாக காஷ்மீரின் புகழ் பெற்ற தால் ஏரியில் மிதக்கும் சினிமா தியேட்டர் தொடங்கப்பட்டுள்ளது. காஷ்மீரில் சுற்றுலா துறையை ஊக்குவிக்க பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு கட்டமாக, மாநில சுற்றுலா துறையும், ஸ்ரீநகர் ஸ்மார்ட் சிட்டி மற்றும் இளைஞர் நலத்திட்டம் இணைந்து, தால் ஏரியில் மிதக்கும் சினிமா தியேட்டர் திறக்கப்பட்டுள்ளது. உலகிலேயே ஏரியில் மிதக்கும் தியேட்டர் திறக்கப்படுவது இதுவே முதல் முயற்சியாகும்.
யூனியன் பிரதேச தலைமை செயலாளர் அருண் குமார் மேதா, மிதக்கும் தியேட்டரை திறந்து வைத்தார். இதில், தால் ஏரியில் நிலா வெளிச்சத்தில் ஷிகாரா படகில் மிதந்தபடி, சினிமாவை கண்டு களிக்கலாம். பெருநகரங்களில் கார்களில் அமர்ந்தபடி டிரைவ்-இன் தியேட்டர்களில் படம் பார்ப்பது போல, காஷ்மீரில் படகில் மிதந்தபடி படம் பார்ப்பது புது அனுபவமாக இருக்கும்.
இதில் முதல் திரைப்படமாக 1964ல் காஷ்மீரில் எடுக்கப்பட்ட ‘காஷ்மீர் கி காளி’ என்ற பாலிவுட் திரைப்படம் திரையிடப்பட்டது. இது, சுற்றுலா பயணிகளை வெகுவாக கவரக்கூடும் என்றும் இதன் மூலம் சுற்றுலா துறை வளர்ச்சி அடையும் என அரசு தரப்பில் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.