திருவனந்தபுரம்: கேரளாவில் புராதன பொருட்கள் விற்பனையில் பல கோடி ரூபாய் மோசடி செய்த, மோசடி மன்னன் மோன்சனின் விவகாரம் தொடர்பாக நீதிபதி போலீசுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பல்வேறு கேள்விகளை எழுப்பி போலீசாரை அதிர வைத்துள்ளார். கொச்சியில் பழங்கால புராதன பொருட்கள் இருப்பதாக கூறி, பலரை ஏமாற்றி பல கோடி ரூபாய் மோசடி செய்த மோன்சன் கைது செய்யப்பட்டார். இவர் மீது 2 போக்சோ வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவருடன் முன்னாள் மற்றும் தற்போதைய டிஜிபிக்கள் உள்பட ஏராளமான உயர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் தொடர்பு வைத்திருந்தது தெரியவந்தது.
இந்நிலையில் மோன்சனிடம் பணிபுரிந்த அஜித் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனுதாக்கல் செய்தார். அதில், மோன்சனுக்கு எதிராக புகார் கொடுத்ததால் தனக்கு கொலை மிரட்டல் வருகிறது என குறிப்பிட்டிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி தேவன் ராமச்சந்திரன், மோன்சனுக்கு எதிரான வழக்கு குறித்த விவரங்களை தாக்கல் செய்ய டிஜிபி அனில் காந்துக்கு உத்தரவிட்டார். இதையடுத்து போலீஸ் தரப்பில் ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்ைகயை பரிசீலித்த நீதிபதி, கேரள போலீசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது: மனு தாக்கல் செய்த அறிக்கையை படித்தபோது போலீஸ் மீது பல சந்தேகங்கள் எழுகின்றன.
இந்த மோன்சன் போலீஸ் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட பலரை ஏமாற்றி உள்ளார். இவர் மீது போக்சோ வழக்குகள் கூட பதிவு செய்யப்பட்டுள்ளன. உடனுக்குடன் நடவடிக்ைக எடுத்திருந்தால் இவர் மோசடியை தொடர்ந்திருக்க முடியாது. கடந்த 2019ல் போலீஸ் உயரதிகாரிகள் மோன்சனின் வீட்டிற்கு சென்றுள்ளனர். யார் அழைத்து சென்றார்கள்?. திப்பு சுல்தானின் சிம்மாசனம், முகம்மது நபி பயன்படுத்திய பாத்திரம் என அவர் கூறும்போதும் அதில் உண்மை இருக்கிறதா? என்று போலீசாரால் ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை. புராதன பொருட்களை வைத்திருக்க லைசென்ஸ் உள்ளதா? என்று கேட்டிருக்க வேண்டாமா?.
போலி புராதன பொருட்களை ஏன் போலீசாரால் கண்டுபிடிக்க முடியவில்லை. மோன்சனுக்கு எதிராக விசாரணை நடத்த 2019 மே மாதம் டிஜிபி உத்தரவிட்டுள்ளார். ஆனால் ஒரு வாரம் கழித்து அவருக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது ஏன்?. டிஜிபி உத்தரவிட்டும் 2 மாதங்களுக்கு பின்னர் தான் உளவுத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது. இவ்வாறு பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். இந்த விவகாரம் கேரளாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.