சிவகாசி: தொடர் மழையின் காரணமாக சிவகாசி பஸ் டெப்போவில் மழைநீர் தேங்கி சகதிக்காடாக காட்சியளிக்கிறது. சிவகாசி-சாத்தூர் சாலையில் அரசு பஸ் டெப்போ இயங்கி வருகின்றது. இந்த டெப்போவில் 72 பஸ்கள் உள்ளன. பஸ்கள் நிற்கும் இடத்தில் சிமெண்ட் தளம் அமைக்க வேண்டும் என்று டிரைவர்கள் தொடர்நது வலியுறுத்தியும் கண்டுகொள்ளப்படவில்லை. இந்த இந்நிலையில் சிவகாசியில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது.
ஏற்கனவே டெப்போவிற்குள் குண்டும் குழியுமாக இருப்பதால் மழைநீர் தேங்கி நிற்கிறது. பஸ்கள் உள்ளே சென்று வந்ததால் சகதிக்காடாகி விடுகிறது. பஸ்களை உள்ளே நிறுத்திவிட்டு வெளியே எடுக்க முடியாமல் டிரைவர்கள் சிரமப்படுகின்றனர். சகதியில் சிக்கிக் கொண்டு பஸ்சை வெளியே எடுப்பதற்குள் படாதபாடு படுகின்றனர். எனவே, சிவகாசி பஸ் டெப்போவிற்குள் மழைநீர் தேங்காமல் வடிந்தோடும் வகையில் சிமென்ட் தளம் அமைக்க வேண்டும் என்று டிரைவர்கள் வலியுறுத்துகின்றனர்.