மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் தற்போது ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மும்பையில் சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட வழக்கில் கைதான ஆர்யன் கான் 28 நாட்கள் சிறை தண்டனை அனுபவித்து, தற்போது ஜாமினில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்ட நிலையில் சிறையிருந்து தற்போது வெளியே வந்துள்ளார்.
மும்பையில் சொகுசு கப்பலில் ரேவ் பார்ட்டி எனப்படும் போதை விருந்து நடைபெறுவதாக தகவலறிந்த மும்பை போதை பொருள் தடுப்பு இயக்குனர் சமீர் வான்கடே தலைமையிலான அதிகாரிகள் அதே கப்பலில் பயணிகள் போல் சென்றுள்ளனர். கப்பல் நடுக்கடலை நெருங்கியபோது பார்ட்டி தொடங்கியுள்ளது. அதில் பயணித்தவர்கள் தடை செய்யப்பட்ட போதை பொருட்களை பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இதையடுத்து போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் அவர்களை கையும் களவுமாக பிடித்தனர். பிடிபட்டவர்களில் பல பேர் மும்பை திரையுலகத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது.
அதில் குறிப்பாக பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக் கான் மகனான ஆர்யன் கானும் ஒருவர். பின்னர் போதை பொருள் தடுப்பு அதிகாரிகள் ஆர்யன் கானை சிறையில் அடைத்து விசாரணை மேற்கொண்டனர். கடந்த 28 நாட்கள் சிறை தண்டனை அனுபவித்த ஆர்யன் கானுக்கு நேற்று முன்தினம் ஜாமீன் கிடைத்த நிலையில் ஆர்யன் கான் தற்போது சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார்.