மதுரை: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி, மதுரை கிழக்கு தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ நன்மாறன் (74). மதுரை பெத்தானியாபுரத்தில் வசித்து வந்த இவர், நேற்று முன்தினம் திடீர் மூச்சு திணறலுக்கு ஆளாகி, மதுரை அரசு மருந்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அன்று மாலை 4 மணிக்கு காலமானார். அவரது உடல், மதுரை மகபூப்பாளையத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அவரது உடலுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று பிற்பகல் மலர் மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். நன்மாறன் குடும்பத்தினருக்கும் முதல்வர் ஆறுதல் கூறினார்.
தமிழக முதல்வருடன் மதுரை கலெக்டர் அனீஷ்சேகர், அமைச்சர்கள் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், சாத்தூர் ராமச்சந்திரன், மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோர் உடன் சென்றனர். தொடர்ந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அனைத்துக்கட்சித் தலைவர்கள் அஞ்சலி செலுத்தினர். பின்னர் அவரது உடல் கட்சியின் மாவட்டக்குழு அலுவலகத்திலிருந்து ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தத்தனேரி மயானம் கொண்டு செல்லப்பட்டது. அங்கு மாலையில் தகனம் செய்யப்பட்டது. இதில் மார்க்சிஸ்ட் கட்சியினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.