×

முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது: கேரளாவுக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் அமைச்சர் துரைமுருகன் அறிக்கை..!

சென்னை: முல்லை பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார். முல்லைப் பெரியாறு அணையின் இயக்கம் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், அவர் கூறியதாவது: உச்சநீதிமன்றம், முல்லைப் பெரியாறு அணையில் 142 அடிவரையில் நீரை தேக்கிவைக்க வழங்கிய ஆணையின்படியும், ஒன்றிய நீர்வளக் குழுமம் ஒப்புதல் அளித்தவாறு நிர்ணயிக்கப்பட்ட மாதவாரியான அணையின் நீர்மட்ட அட்டவணைப்படியும் முல்லைப் பெரியாறு அணைக்கு வரும்நீர், தேக்கப்படும் நீர், மழைப் பொழிவு ஆகியவைகளை தொடர்ந்து தமிழ்நாடு கண்காணித்து வருகிறது.

கேரளாவைச் சார்ந்த தனிநபர் ஒருவர் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் 28.10.2021 அன்று தமிழ்நாட்டின் வாதங்களை கேட்ட பின், 11.11.2021 அன்று மீண்டும் விசாரணைக்கு வரும்வரை,  ஒன்றிய நீர்வளக் குழுமம் ஒப்புதல் அளித்துள்ள நிர்ணயிக்கப்பட்ட நீர்மட்ட அட்டவணையை பின்பற்றுமாறு ஆணையிட்டுள்ளது.  தமிழ்நாடு,  நிர்ணயிக்கப்பட்ட அட்டவணையின் படியே நீர்மட்டத்தை பராமரிப்பதற்காக, வைகை அணைக்கு தொடர்ந்து நீரை குகைபாதை வழியாக கடத்துகிறது.  

முல்லைப் பெரியாறு அணையின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தொடர்ந்து மழை பொழிவதாலும், அணையின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதாலும், தமிழ்நாடு அரசின் நீர்வள ஆதாரத் துறை எடுத்த முடிவின்படி, வைகை அணைக்கு குகைபாதை வழியாக அதிகபட்சமாக வெளியேற்றப்படும் நீரோடு, கேரள அதிகாரிகளுக்கு உரிய காலத்தில் முன்னெச்சரிக்கை/அறிவிப்பு  அளித்தபின் இன்று காலை 7.30 மணிக்கு முல்லைப் பெரியாறு அணையின் இரு வழிந்தோடி  மதகுகளை திறந்து வினாடிக்கு 500 கனஅடி வீதம் நீரை வெளியேற்றி வருகிறது.  இது, ஒன்றிய நீர்வளக் குழுமம் ஒப்புதல் அளித்துள்ள நிர்ணயிக்கப்பட்ட மாதவாரியான அணையின் நீர்மட்ட அட்டவணையை பின்பற்றியே செய்யப்படுகிறது.   

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது. ஒன்றிய நீர்வளக் குழுமம் ஒப்புதல் அளித்துள்ள நிர்ணயிக்கப்பட்ட மாதவாரியான அணையின் நீர்மட்ட அட்டவணைப்படி தமிழ்நாடு அரசின் நீர்வள ஆதாரத் துறை, அணையினை கவனமாக இயக்கி வருகிறது.  இதற்கு புறம்பாக வரும் எந்த தகவலும் உண்மையானவை அல்ல என்பதால் அவை புறக்கணிக்கப்பட வேண்டியவை ஆகும். தமிழ்நாட்டுக்கு சொந்தமான முல்லைப்பெரியாறு அணை, நிலையான வழிகாட்டுதல்களின்படி முறையாக இயக்கப்பட்டு வருகிறது என்பது மீண்டும் வலியுறுத்தப்படுகிறது எனவும் தெரிவித்துள்ளார்.


Tags : Mullaperiyaru Dam ,Minister ,Duraimurugan ,Kerala , Mullaperiyaru Dam, Minister Duraimurugan, Report
× RELATED சாட்டை துரைமுருகனுக்கு நவாஸ் கனி தரப்பு நோட்டீஸ்..!!