மதுரை: மதுரை கோரிபாலயத்திலுள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முத்துராமலிங்க தேவரின் 114வது ஜெயந்தி தினத்தை முன்னிட்டு மதுரை கோரிபாலயத்திலுள்ள அவரது திருஉருவ சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நாளை பசும்பொன்னில் தேவர் ஜெயந்தி விழா நடைபெறவுள்ள நிலையில் அதிமுக, அமமுக இடையேயான குழப்பத்தை தவிர்க்கும் பொருட்டு இன்றே மரியாதையை செய்தார் சசிகலா. காலை 8 மணியளவில் மதுரை கோரிபாலயத்திலுள்ள தேவர் சிலைக்கு சசிகலா மாலை அணிவித்து மரியாதையை செலுத்தினார் அதற்க்கு கொட்டும் மழையிலும் திரளான தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய பிரச்சார வாகனத்தில் வந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதை தொடர்ந்து தெப்பக்குளம் பகுதியில் அமைந்துள்ள மருதுபாண்டியர் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்தார் அதன் பின்னர் சாலை மார்க்கமாக தஞ்சை செல்ல உள்ளார். சசிகலா முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பயன்படுத்திய பிரச்சார வாகனத்தை பாயன்படுத்தி வந்தது தொண்டர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பசும்பொன்னில் இருந்து தனது அதிகாரபூர்வ அரசியல் பயணத்தை தொடங்குவர் என அக்கட்சியின் தொண்டர்கள் கூறி வருகின்றனர்.