டெல்லி: ஒன்றிய அரசின் அலட்சியப்போக்கால் நாட்டில் விலைவாசி உயர்ந்திருப்பதாகவும், மக்கள் பெறும் சிரமத்தை அனுபவித்து வருவதாகவும் காங்கிரஸ் விமர்சித்துள்ளது. தினம் தினம் பெட்ரோல், டீசல், சமையல் காஸ் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. இதனால் சாதாரண, ஏழை, எளிய, நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பணம் தேவைப்படும்போதெல்லாம் ஒன்றிய அரசு விலையை உயர்த்தி, லட்சக்கணக்கான கோடி ரூபாயை மக்களிடமிருந்து பறித்துக் கொண்டே இருக்கிறது என பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர். கோடான கோடி இளைஞர்கள் வேலையின்றித் தவித்து வரும் நிலையில், தொடர்ந்து சுமையை ஏற்றி வருவது மக்களுக்கு விரோதமாக ஒன்றிய அரசு செயல்படுவதை காட்டுகிறது.
இந்நிலையில், நாட்டில் விலைவாசி உயர்வு எங்கு உள்ளது என்றும் எந்த பொருளும் விலை உயரவில்லை என்றும் பாஜகவை சேர்ந்த ஒன்றிய அமைச்சர் பகவத் கூபா அண்மையில் தெரிவித்திருந்தார். இதற்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் தினேஷ் குண்டுராவ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், நாட்டில் விலைவாசி உயர்வு காரணமாக மக்கள் பெறும் சிரமத்தை அனுபவித்து வரும் நிலையில், விலைவாசி உயர்வு எங்கு உள்ளது என்று ஒன்றிய அமைச்சர் கேள்வி கேட்கலாமா? என்றும் ஒன்றிய அமைச்சர் பகவத் கூபா இந்த நாட்டில் தான் உள்ளாரா? அல்லது வேறு கிரகத்தில் உள்ளாரா? என்றும் சரமாரியாக கேள்வி எழுப்பினார்.
80 ரூபாயாக இருந்த சமையல் எண்ணெய் விலை தற்போது 180 ரூபாயாக அதிகரித்திருப்பதாகவும், பெட்ரோல் விலை 120 ரூபாய் வரை உயர்ந்துள்ளதாகவும், சமையல் எரிவாயு சிலிண்டர் விலையோ 900 ரூபாயாக அதிகரித்திருப்பதாகவும் தினேஷ் குண்டுராவ் தெரிவித்துள்ளார். விலைவாசி உயர்வை குறைப்பது குறித்து ஆலோசிக்காமல் தேவையில்லாத கருத்துக்களை ஒன்றிய அமைச்சர்கள் தெரிவிப்பது துர்தஷ்டவசமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.