டெல்லி: இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநர் சசிகாந்த் தாஸின் பதவிக்காலம் மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்து ஒன்றிய அரசின் கேபினட் நியமனங்களுக்கான குழு அறிவித்துள்ளது. ரிசர்வ் வங்கியின் கவர்னராக 2018ம் ஆண்டு முதல் பதவி வகித்து வருபவர் சக்தி காந்த தாஸ். ஒன்றிய அரசின் பொருளாதார விவகாரத்துறையின் முன்னாள் செயலாளரான இவர், ரிசர்வ் வங்கியின் புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டார்.
ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த சக்தி காந்த தாஸ் 1980ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். ஆக தேர்வானவர். தமிழக கேடர் ஆபீஸராகப் பணியாற்றியவர். மத்திய அரசுப் பணிகளுக்கு 2008ம் ஆண்டு சென்ற இவர், அதற்கு முன்பு தமிழக அரசின் வருவாய்த்துறை ஆணையர், தொழில்துறைச் செயலாளர், திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் எனப் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர்.
இந்த நிலையில், ரிசர்வ் வங்கி ஆளுநர் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டிப்பு செய்து ஒன்றிய அரசு உத்தரவிட்டுள்ளது. சக்தி காந்த தாஸின் பதவிக்காலம் டிசம்பர் 10ம் தேதியுடன் முடிவிருந்த நிலையில் ஒன்றிய அரசு பதவிகாலத்தை நீட்டிப்பு செய்து உத்தரவிட்டுள்ளது.