புதுடெல்லி: இந்தியாவில் 53 கோடி வாட்ஸ் அப், 41 கோடி பேஸ்புக், 21 கோடி இன்ஸ்டாகிராம் பயனாளர்கள் இருக்கின்றனர். இந்த தளங்களில் வெளியாகும் செய்திகளின் உண்மைத் தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. எனவே, டிவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு அவற்றில் வெளியாகும் செய்திகளின் பொறுப்பை உணர்த்துவதற்கான புதிய விதிமுறைகளை ஒன்றிய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் சமீபத்தில் அமல்படுத்தியது.
இதற்கிடையே, பேஸ்புக்கில் வெளியாகும் வன்முறை, வெறுக்கத்தக்க பேச்சுகள், தேர்தல் கருத்து கணிப்புகள் நீக்கப்படாமல் மக்களிடையே திணிக்கப்படுவதன் மூலம் இந்தியத் தேர்தலில் பேஸ்புக் தலையிடுவதாக காங்கிரஸ் குற்றம்சாட்டி இருந்தது. இந்திய பேஸ்புக் பக்கங்கள் வெறுக்கத்தக்க பேச்சுகளால் நிரம்பி இருப்பதாக அந்நிறுவன அமெரிக்க பிரிவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. பேஸ்புக் தளத்தில் வெளியாகும் போலி செய்திகள் மீது எதை அளவுகோலாக கொண்டு நடவடிக்கை எடுக்கப்படுகிறது? என்பது உள்ளிட்ட விவரங்களை அளிக்கும்படி, அந்த நிறுவனத்துக்கு ஒன்றிய அரசு உத்தரவிட்டு கடிதம் எழுதி இருப்பதாக பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது. இதை பேஸ்புக் நிறுவனம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை.