×

குமரியில் தொடரும் மழையால் நீரில் மூழ்கி அழுகும் நெற்பயிர்கள்: விவசாயிகள் கவலை

நாகர்கோவில்: குமரி மாவட்டத்தில் தற்போது கும்ப பூ சாகுபடி நடந்து வருகிறது. அதே வேளையில் தொடர்ந்து மழையும் பெய்து வருகிறது. வயல்களுக்குள் தண்ணீர் பெருகி உள்ளதால் புத்தேரி பகுதியில் நெற்பயிர்கள் மூழ்கி கிடக்கிறது. தொடர்ந்து தண்ணீர் வடியாமல் இருப்பதால் நெற்பயிர்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் கவலையில் உள்ளனர். குமரி மாவட்டத்தில் கன்னிப்பூ, கும்பப் பூ என்று இருபோக நெல்சாகுபடி நடந்து வருகிறது. கன்னிப்பூ ஜூன் மாதம் சாகுபடி செய்யபடும். குமரி மாவட்டத்தில் குளத்து பாசனவசதி பெற்ற வயல் பரப்புகளில் கடந்த செப்டம்பர் மாதம் அறுவடை நடந்தது. ஆற்றுபாசன வசதி பெற்று வரும் வயல்பரப்புகள் அக்ேடாபர் மாதம் அறுவடை தொடங்கி நடந்தது.

இந்த அறுவடைதொடங்கிய நிலையில் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்ய தொடங்கியது. இதையடுத்து மழை நிற்கும்போது விவசாயிகள் அறுவடை செய்தனர். ஆகவே நெல் மட்டும் விவசாயிகளுக்கு கிடைத்தது. அதே வேளையில் வைக்கோல் மழையால் நனைத்து நாசமானது. இந்த நிலையில் வடகிழக்கு பருவமழை தொடங்குதவற்கு முன்பு காற்றழுத்த தாழ்வு மண்டலத்தால், குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பலத்த மழை பெய்தது. இதனால் மாவட்டத்தில் பல பகுதிகளில் நீரில் முழ்கியது. பின்னர் வடக்கிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் மழை நீடித்து வருகிறது. ஆகவே தோவாளை சானலில் இருந்து நீர் பாசனம் பெறும் செண்பராமன்புதூரில் இருந்து ராஜாவூர் வரை பயிரிடப்பட்டுள்ள நெல்கதிர்களை அறுவடை செய்யமுடியாத நிலை இருந்து வருகிறது. இது தவிர ஆணைகிடங்கு, வீரநாராயணமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் அறுவடை செய்ய முடியாத நிலை இருந்து வருகிறது.

அறுவடை செய்யப்பட்ட பகுதிகளில் கும்ப பூ சாகுபடி பணியை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் புதிதாக நாற்று நடப்பட்ட வயல்களில் தண்ணீர் தேங்கி நிற்கும் நிலை இருந்து வருகிறது. தெரிசனகோப்பு பகுதியில் தேங்கி நின்ற தண்ணீர் வடியதொடங்கி உள்ளது. இருப்பினும் வயல்பகுதியில் சகதி தேங்கி நிற்கிறது. இதனால் தேவையில்லாத பணம் விரையம் விவசாயிகளுக்கு ஏற்பட்டு உள்ளது. மேலும் புத்தேரி பகுதிகளில் வயல்பகுதிகளில் தண்ணீர் வடியாத நிலை நீடித்து வருகிறது. இதன் காரணமாக சாகுபடி செய்யபட்ட குப்பபூ நெற்பயிர்கள் அழுகும் நிலை உருவாகியுள்ளது. இதனால் விவசாயிகள் கலக்கம் அடைந்துள்ளனர்.

இது குறித்து முன்னோடி விவசாயி செண்பசேகரபிள்ளை கூறியதாவது: கன்னிப்பூ அறுவடையின்போது அதிக மகசூல் கிடைக்கும். இதனால் விசாயிகளுக்கு ஒரு ஏக்கருக்கு குறைந்தது ரூ.12 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை லாபம் கிடைக்கும். ஆனால் இந்த வருடம் மழை பெய்து காரணமாக, நெல் ஈரப்பதம் அதிகமாக இருந்தால், நெல்கொள்முதல் நிலையங்களில் அதிக அளவு நெல் எடுக்கவில்லை. இதனால் வெளிமார்க்கெட்டில் விவசாயிகள் குறைந்த விலைக்கு நெல்களை விற்பனை செய்தனர். மேலும் மழையால் வைக்கோல் அனைத்தும் நனைந்து எடுக்கமுடியாத நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் பலத்த நஷ்டத்தை சந்தித்து உள்ளனர். தற்போது அறுவடை செய்யப்பட்ட வயல்பகுதிகளில் கும்பபூ சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

குமரியில் பெய்து வரும் தொடர் மழையால் வயல்பகுதியில் தண்ணீர் தேங்கியது. ஒரு சில பகுதிகளில் தண்ணீர் வடிய தொடங்கி உள்ளது. சில பகுதியில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் நெல்பயிர்கள் அழுகும் சூழ்நிலை உருவாகி உள்ளது. விவசாயிகள் தொடர்ந்து நஷ்டத்தை சந்தித்து வருவதால் வேளாண்மை துறை உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கவேண்டும். என்றார்.


Tags : Kumar , Kumari, farmers
× RELATED கேரளாவில் எதிர்க்கட்சியினர்...