குஜிலியம்பாறை:குஜிலியம்பாறையில் காவிரி குழாயில் நீர்க்கசிவு ஏற்பட்டு 7 மாதங்களாகியும் அதிகாரிகள் சரிசெய்ய நடவடிக்கை எடுக்காதால் சாலையில் குடிநீர் வீணாகி செல்கிறது.கரூர் காவிரி ஆற்று பகுதியில் கடந்த 2005ம் ஆண்டு ராட்சத கிணறு அமைக்கப்பட்டு அதிலிருந்து ராட்சத குழாய்கள் மூலம் கரூர், ஜெகதாபி, பாளையம், குஜிலியம்பாறை, கோவிலூர், வேடசந்துர் ஆகிய பகுதிகளின் வழியாக ஒட்டன்சத்திரம் நகருக்கு காவிரி கூட்டு குடிநீர் சப்ளை செய்யப்படுகிறது.
இந்நிலையில் குஜிலியம்பாறையில் உள்ள பேரூராட்சி அலுவலகம் செல்லும் மெயின் சாலையில் காவிரி குடிநீர் குழாயில் கடந்த 7 மாதங்களுக்கு முன்பு நீர்க்கசிவு ஏற்பட்டது. லேசாக ஏற்பட்ட கசிவு நாளடைவில் சாலையின் பக்கவாட்டில் நீரோடை போல் ஓடி வருகிறது. இதனால் குடிநீர் முழுவதும் சாலையில் வீணாகி போய்கிறது. மேலும் நீர்கசிவு ஏற்பட்ட இடத்தில் குளம்போல் தண்ணீர் தேங்கி உள்ளது. இதனால் கொசு உற்பத்தி அதிகரித்து வருவதால், இப்பகுதி மக்களுக்கு தொற்று நோய் அச்சம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து இப்பகுதி மக்கள் மாவட்ட குடிநீர் வடிகால் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றும், இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டுள்ளனர். இது பொதுமக்கள் மத்தியில் ஏமாற்றத்தையும், வேதனையும் அளித்துள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் காவிரி குழாய் கசிவை சரிசெய்து குடிநீர் வீணாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.