திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே ஸ்டேட் பேங்க் இந்தியாவின் ஏ.டி.எம். இயந்திரத்தை இரும்பு கம்பியால் உடைத்து பணத்தை திருட முயற்சித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. ஏரிப்பாளையம் மின்வாரிய அலுவலகம் அருகே அமைந்துள்ள ஏ.டி.எம். இயந்திரத்திற்கு நள்ளிரவு இரண்டரை மணிக்கு முகமூடி அணிந்து நுழைந்த மர்மநபர் ஒருவர் இயந்திரத்தை உடைத்து பணத்தை திருட முயற்சித்துள்ளார். ஆனால் பணம் வைக்கப்பட்டிருக்கும் பகுதியை உடைக்க முடியாததால் கொள்ளையன் பாதியிலேயே அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இதனால் ஏ.டி.எம். இயந்திரத்தில் இருந்த பணம் தப்பியது. இச்சம்பவம் குறித்து உடுமலைப்பேட்டை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பகுதியை சுற்றியுள்ள மற்ற சிசிடிவி காட்சிகளை கொண்டு அந்த நபரை தேடும் முயற்சியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக திருப்பூரில் தனியார் வங்கி ஏ.டி.எம் இயந்திரத்தை கயிறுகட்டி இழுத்துச் சென்ற சம்பவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.