தஞ்சை: தஞ்சையில் உள்ள தனியார் ஓட்டலில் தங்கியிருந்த அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன், அங்கு வைக்கப்பட்டிருந்த மருது சகோதரர்கள் உருவப்படத்திற்கு நேற்று மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவர் அளித்த பேட்டி: மதுரையில் சசிகலா பற்றி அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கருத்து சொல்லியிருப்பது சரியானது தான். அவர் எப்போதும் நிதானமாகத்தான் பேசுவார். அதேபோல் தான் தற்போது நிதானமாக கருத்து கூறியுள்ளார்.
அமமுக தொடங்கப்பட்டது துரோகத்தை வீழ்த்தி, ஜெயலலிதாவின் ஆட்சியை மீட்டெடுக்கத்தான்.
அதில் உறுதியுடன் பயணத்தை தொடர்ந்து வருகிறோம். தமிழகத்தில் ஜெயலலிதாவின் ஆட்சியை உருவாக்கும் முயற்சியை இறுதி மூச்சு வரை தொடருவோம். தேர்தலில் வெற்றி, தோல்வியை கண்டு துவண்டு போகிறவர்கள் நாங்கள் அல்ல. நாங்கள் ஜெயலலிதாவின் பிள்ளைகள். அமமுக தொண்டர்கள் அனைவரும் என்னோடு, தோளோடு தோள் நின்று பயணிப்பவர்கள். உண்மையான பிள்ளைகள், எந்த எதிர்பார்ப்பும் இன்றி இயக்கத்தை வழி நடத்துபவர்கள். நாங்கள் அதிமுகவை மீட்டெடுக்கும் முயற்சியில் வெற்றி பெறுவோம். இவ்வாறு அவர் கூறினார்.