×

வேலை வாங்கித் தருவதாக ரூ.76 லட்சம் மோசடி அதிமுக முன்னாள் அமைச்சர் சரோஜா மீது 3 பிரிவில் வழக்கு

நாமக்கல்: வேலை வாங்கித் தருவதாக ரூ.76 லட்சம் மோசடி செய்ததாக, நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த மாஜி அதிமுக அமைச்சர் சரோஜா மீது, மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் 3 பிரிவுகளில் வழக்குபதிவு செய்துள்ளனர்.  நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்தவர் குணசீலன். இவர் முன்னாள் சமூக நலன் மற்றும் சத்துணவு திட்டத்துறை அமைச்சர் சரோஜாவின் உறவினர். இவர் கடந்த 10 ஆண்டாக முன்னாள் அமைச்சர் சரோஜாவிடம் உதவியாளராக இருந்து வந்தார். இந்நிலையில் குணசீலன், கடந்த சில தினங்களுக்கு முன், முன்னாள்அமைச்சர் சரோஜா மீது, ராசிபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதில் சத்துணவு வேலை வாங்கி தருவதாக, பலரிடம் ரூ.76 லட்சம் வரை பணம் பெற்ற முன்னாள் அமைச்சர் சரோஜா மோசடி செய்து விட்டதாக கூறியிருந்தார். இந்த புகார் மனு மீது வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தும்படி, மாவட்ட எஸ்பி சரோஜ் குமார் தாகூர், மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டார். இதன் பேரில் குற்றப்பிரிவு போலீசார்,  முன்னாள் அமைச்சர் சரோஜா மீது மோசடி, கொலை மிரட்டல் உள்ளிட்ட 3 பிரிவுகளில் வழக்குபதிவு செய்துள்ளனர்.
அதிமுக முன்னாள் அமைச்சர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளதால், அவர் எந்நேரமும் கைது செய்யப்படலாம் என்ற பரபரப்பு நாமக்கல்லில் நிலவுகிறது.

Tags : AIADMK ,minister ,Saroja , AIADMK ex-minister Saroja charged with Rs 76 lakh fraud
× RELATED பாஜவுக்கு முகவர்கள் இருந்தால்தானே...