×

கோயம்பேடு மார்க்கெட்டில் அதிகாரிகள் அதிரடி: ரசாயனத்தில் பழுக்கவைக்கப்பட்ட 15 டன் வாழைத்தார்கள் அழிப்பு: வியாபாரிகளுக்கு கடும் எச்சரிக்கை

அண்ணாநகர்: சென்னை கோயம்பேடு பழ மார்க்கெட்டில் கார்பைடு கல் மற்றும் ரசாயனத்தில் பழுக்கவைத்த 15 டன் வாழைத்தார்களை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்ததுடன் இச்செயலில் ஈடுபடும் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்துள்ளனர். சென்னை கோயம்பேடு பழ மார்க்கெட்டில் கார்பைடு கல்லில் பழுக்கவைத்த வாழைத்தார்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தது. இதையடுத்து இன்று அதிகாலை 4 மணி அளவில், சென்னை மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் சதீஷ்குமார் மற்றும் உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி சுந்தரமூர்த்தி ஆகியோரின் தலைமையில் 7 பேர் கொண்ட குழுவினர் பழ மார்க்கெட்டில் உள்ள சுமார் 100க்கும் மேற்பட்ட கடைகளில் புகுந்து அதிரடி சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின்போது கார்பைடு கல் மற்றும் ரசாயன கலந்து பழுக்கவைக்கப்பட்டிருந்த 15 டன் வாழைத்தார்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். பின்னர் அந்த வழைத்தார்கள் அனைத்தையும் பறிமுதல் செய்து மார்க்கெட் பின்புறம் உள்ள இடத்துக்கு கொண்டு சென்று அழித்தனர். வாழைத்தாரை தொடர்ந்து வேறு பழங்கள் கார்பைடு கல்லில் வைத்து பழுக்க வைக்கப்பட்டுள்ளதா என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் கூறியதாவது; கார்பைடு கல் மற்றும் ரசாயனம் தெளித்து செயற்கை முறையில் பழங்களை பழுக்கவைத்து விற்பனை செய்வது தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பழுக்கவைக்கப்படும் பழங்களை சாப்பிட்டால் உடல்பாதிப்பு, வயிற்று போக்கு, அஜீரண கோளாறுகள் ஏற்படுவதுடன் புற்றுநோய் தாக்கவும் வாய்ப்புள்ளது. எனவே கார்பைடு கல்லில் பழங்களை பழுக்கவைக்கும் செயலில் வியாபாரிகள் ஈடுபடக்கூடாது. அவ்வாறு செய்தால் வியாபாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அவர்கள் தொடர்ந்து வியாபாரம் செய்யமுடியாத நிலைமை ஏற்படும். இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

 சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ‘’கோயம்பேடு மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் எவ்வளவுதான் சோதனைகள் மேற்கொண்டாலும் ரசாயனத்தில் பழுக்கவைக்கப்பட்ட பழங்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதை தடுக்க முடியவில்லை. எனவே, பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை மூலமும் கடுமையான சட்டங்கள் மூலம் கட்டுப்படுத்தினால்தான் இவற்றை தடுக்க முடியும். உடலுக்கு கேடு விளைவிக்கும் பழங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்வதுடன் இந்த செயலில் ஈடுபடுகின்றவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இப்படி செய்தால்தான் இதுபோன்ற செயல்கள் தொடர்ந்து நடைபெறாமல் தடுக்க முடியும். மக்களும் பாதுகாப்பாக இருப்பார்கள்’ என்றனர்.

Tags : Coimbatu ,Marketplace , koyambedu Market, officials, lived, warning
× RELATED கோயம்பேடு – ஆவடி இடையே 43 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் சேவை?