×

நியூசிலாந்தை வீழ்த்தி பாகிஸ்தான் 2வது வெற்றி சோயிப் மாலிக்-ஆசிப் அலி பார்ட்னர் ஷிப் அருமை: கேப்டன் பாபர் அசாம் பாராட்டு

சார்ஜா: 7வது ஐசிசி டி.20 கிரிக்கெட் தொடரில் சார்ஜாவில் நேற்றிரவு நடந்த 19வது போட்டியில் சூப்பர் 12 சுற்றில் குரூப் 2 பிரிவில் பாகிஸ்தான்-நியூசிலாந்து அணிகள் மோதின. டாஸ் வென்ற பாகிஸ்தான் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த நியூசிலாந்து 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 134 ரன் எடுத்தது. டேரில் மிட்செல், டெவோன் கான்வே தலா 27, கேப்டன் வில்லியம்சன் 25, மார்ட்டின் குப்டில் 17 ரன் எடுத்தனர். பாகிஸ்தான் பந்து வீச்சில் ஹாரிஸ் ரவூப் 4 விக்கெட் வீழ்த்தினார். பின்னர் களம் இறங்கிய பாகிஸ்தான் அணியில் கேப்டன் பாபர் அசாம் 9, பகார் ஜமான், முகமது ஹபீஸ் , இமாத் வாசிம் தலா11 ரன்னில் ஆட்டம் இழந்தனர். முகமது ரிஸ்வான் 33 ரன்னில் அவுட் ஆனார்.18.4ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 135 ரன் எடுத்த பாகிஸ்தான் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஆசிப் அலி 27 (12பந்து), சோயிப் மாலிக் 26 (20பந்து) ரன்னில் ஆட்டம் இழக்காமல் இழந்தனர். நியூசிலாந்து பவுலிங்கில் இஷ் சோதி 2 விக்கெட் வீழ்த்தினார். ஹாரிஸ் ரவூப் ஆட்டநாயகன் விருது பெற்றார். முதல்போட்டியில் இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தானுக்கு இது 2வது வெற்றியாகும்.

வெற்றிக்கு பின் பாகிஸ்தான் பாபர் அசாம் கூறுகையில், வெற்றி மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது, இந்த  நம்பிக்கையை முன்னோக்கி கொண்டு செல்ல முயற்சிப்போம். ஷாகின், ஹாரீஸ் பந்துவீசிய விதம் மிகவும் சுவாரசியமாக இருந்தது. நாங்கள் 10 ரன் அதிகம் கொடுத்தோம் என்று நினைக்கிறேன். ஆனால் கிரிக்கெட்டில் இது சகஜம் தான். ஆரம்பத்தில் விக்கெட் இழந்ததால் பார்ட்னர் ஷிப் தேவைப்பட்டது. மாலிக் அனுபவத்தை வெளிப்படுத்தினார். ஆசிப் அலியும் பங்களித்தார். ஒவ்வொரு போட்டியும் முக்கியமானது, அனைத்து துறையிலும் சிறப்பாக செயல்படவேண்டும், என்றார்.நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் கூறுகையில், தோல்வி மிகவும் ஏமாற்றம்அளிக்கிறது. ஆட்டத்தின் பாதியில் நம்பிக்கையுடன் இருந்தோம். துரதிர்ஷ்டவசமாக எங்களால் முன்னோக்கி செல்ல முடியவில்லை, பாகிஸ்தான் மிகவும் வலுவான அணி. அவர்களுக்கு வாழ்த்துக்கள். தவறுகளை சரிசெய்து இந்தியாவுக்கு எதிரான சவாலுக்குத் தயாராக இருப்போம், என்றார்.

அல்லாவுக்கு நன்றி... ஹாரிஸ் ரவூப் மகிழ்ச்சி
ஆட்டநாயகன் ஹாரிஸ் ரவூப் அளித்தபேட்டி: நான் அல்லாவுக்கு நன்றி கூற விரும்புகிறேன். ரசிகர்கள் முழுவதும் எங்களுக்கு ஆதரவு அளித்து இந்த வெற்றிக்கு உதவினர். 2 வருடங்களாக நான் இங்கு விளையாடி வருகிறேன். நான், ஷாஹீன் மற்றும் ஹசன் அலி ஒருவருக்கொருவர் பேசுகிறோம், ஒருவருக்கொருவர் நம்பிக்கையைப் பெறுகிறோம். 4 விக்கெட்டுகளில் பவர்பிளேயில் குப்டிலின் விக்கெட்தான் சிறந்தது. அனைவருக்கும் நன்றி, என்றார்.

இங்கிலாந்து-வங்கதேசம் இன்று மோதல்
உலக கோப்பை டி.20 தொடரில் இன்று 2 போட்டி நடக்கிறது. மாலை 3,30 மணிக்கு குரூப் 1 பிரிவில் இங்கிலாந்து-வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இங்கிலாந்து முதல் போட்டியில் வெஸ்ட்இண்டீசை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பட்டம் வெல்லும் அணி என கணிக்கப்பட்டுள்ள  இங்கிலாந்து இன்று 2வது வெற்றிக்காக களம் காண்கிறது.வங்கதேசம் முதல் போட்டியில் இலங்கையிடம் வீழ்ந்த நிலையில், இன்று வெற்றி கணக்கை தொடங்க போராடும். இரவு 7.30 மணிக்கு குரூப் 2 பிரிவில் அபுதாபியில்  ஸ்காட்லாந்து-நமீபியா மோதுகின்றன. ஸ்காட்லாந்து முதல் ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானிடம் வீழ்ந்தது. நமீபியா உலக கோப்பை வரலாற்றில் தகுதிச்சுற்றை தாண்டி  ஆடும் முதல்போட்டி இதுதான்.


Tags : Pakistan ,New Zealand ,Shoaib Malik ,Asif ,Babur Assam , New Zealand, Pakistan, T20 cricket
× RELATED பாகிஸ்தானில் பயங்கரம் தற்கொலை படை தாக்குதல் 5 சீன பொறியாளர்கள் பலி