திருவள்ளூர்: வல்லூர் அனல்மின் நிலையத்தில் கொதிகலன் கசிவு சீரமைக்கப்பட்டு மின் உற்பத்தி மீண்டும் தொடங்கியது. திருவள்ளூர் மாவட்டம் அத்திப்பட்டு புதுநகரில் தேசிய அனல்மின் கழகமும், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமும் இணைந்து கூட்டு நடவடிக்கையாக வல்லூர் அனல்மின் நிலையத்தை நிறுவி நடத்தப்பட்டு வருகிறது.
இதில் உள்ள 3 அலகுகளில் தலா 500 மெகாவாட் என 1500 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், அனல் மின்நிலையத்தின் 2-வது அலகில் உள்ள கொதிகலனில் அக்.16-ம் தேதி ஏற்பட்ட கசிவு காரணமாக 500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டது.
அந்த அலகில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்யும் பணியில் மின் ஊழியர்கள் 10 நாட்களாக தீவிர முயற்சியில் ஈடுப்பட்டனர். இந்தநிலையில், தற்போது சீரமைக்கும் பணிகள் முடிக்கப்பட்டு இன்று மின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது.