சங்கரன்கோவில் : சங்கரன்கோவில் அருகே கிணற்றில் விழுந்த பசுவை தீயணைப்பு வீரர்கள் கயிறுகட்டி மீட்டனர். சங்கரன்கோவில் அருகே ஊத்தான்குளம் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவர் பசு ஒன்றை வளர்த்து வந்தார். வழக்கம்போல் இரைத் தேடி மேயச்சென்ற பசுவை காணவில்லை. இதனால் பதறிய அவர், பசுவை தேடிசென்ற போது அப்பகுதியில் தடுப்புச்சுவர் இல்லாத காட்டுராஜா என்பவருக்குச் சொந்தமான 45 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது தெரியவந்தது.
இதை பார்த்து பதறிய அவர், சங்கரன்கோவில் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து நிலைய அலுவலர் விஜயன் தலைமையில் விரைந்து வந்த வீரர்கள், கயிறு கட்டி பசுவை உயிருடன் மீட்டு உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். இதை ஊர் பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டினர்.