ஈரோடு : ஈரோடு அருகே சர்வதேச கட்டுமான தரத்தில் 1,500 கடைகளுடன் டெக்ஸ்வேலி ஜவுளி சந்தை பிரமாண்டமாக இயங்கி வருகிறது. தீபாவளி பண்டிகை வரும் 4ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. பண்டிகையை முன்னிட்டு அனைத்து ஜவுளிக்கடைகளிலும் விற்பனை விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில், ஈரோடு அருகே உள்ள கங்காபுரத்தில் சர்வதேச கட்டுமான தரத்தில் டெக்ஸ்வேலி ஜவுளி சந்தை அமைந்துள்ளது. இங்கு வார சந்தை, தினசரி சந்தை என சுமார் 1,500 கடைகளுடன் பிரம்மாண்டமாக செயல்பட்டு வருகிறது. இங்கு, முன்னணி பிராண்டட் ஜவுளி நிறுவன உற்பத்தியாளர்கள் நேரடியாக கடைகளை அமைத்துள்ளனர்.
தமிழகம் மற்றும் அனைத்து மாநிலங்களிலும் கைத்தறி, விசைத்தறிகளால் உற்பத்தி செய்யப்படும் பட்டாடைகள், ஆண்கள், பெண்கள், சிறுவர், சிறுமிகள், குழந்தைகளுக்கான ரெடிமேட் ஆடைகள், உள்ளாடைகள் உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுகிறது. இதில், முன்னணி நிறுவனங்களின் ஆயத்த ஆடைகள் ரூ.150 முதல் ரூ.3 ஆயிரம் வரை தரத்திற்கேற்ப விற்பனை செய்யப்படுகிறது. ஒரே இடத்தில் வெவ்வெறு நிறுவனங்களிடம் இருந்து ஜவுளிகளை மொத்த விலையில் வாங்க முடியும் என்பதால் மக்களிடம் இந்த சந்தை பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தீபாவளி பண்டிகையையொட்டி டெக்ஸ்வேலி கடைகளில் 5 முதல் 50 சதவீதம் வரை தள்ளுபடி விலையில் உற்பத்தியாளர்கள் தங்களது ஜவுளிகளை விற்பனை செய்து வருகின்றனர். இதனால், ஈரோடு மாவட்டம் மட்டும் அல்லாது நாமக்கல், சேலம், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த மக்கள் தங்களது குடும்பத்தினருடன் வந்து ஜவுளிகளை ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர். மேலும், டெக்ஸ்வேலி சந்தைக்கு மக்கள் சுலபமாக வந்து செல்வதற்காக பஸ் வசதியும் அந்த நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.