×

அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கரின் குவாரியில் விதிமீறல் புகார்.: விஜயபாஸ்கர் குவாரி உள்பட 16 இடங்களில் சோதனைக்கு உத்தரவு

புதுக்கோட்டை: அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான குவாரி உள்பட 16 இடங்களில் விதிமீறல் புகார் தொடர்பாக சோதனை நடத்த புவியியல் மற்றும் சுரங்கத்துறை உத்தரவிட்டுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் திருவேங்கைவாசலில் உள்ள சி.விஜயபாஸ்கரனுக்கு சொந்தமான குவாரியில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

அங்கு விதிகளை மீறி அதிக அளவில் ஜல்லியையும், கிறவல் மண்ணையும் எடுத்தது தெரியவந்ததால் குவாரியை குத்தகை எடுத்தவருக்கு ரூ.6.45 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. அண்மையில் விஜயபாஸ்கரின் குவாரியில் நடத்தப்பட்ட லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவு கற்களை வெட்டி எடுத்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து இலுப்பூர் மற்றும் கொளத்தூர் தாலுக்காகளில் உள்ள திருவேங்கைவாசல், மேலூர், அயன்குடி பகுதிகளில் உள்ள குவாரிகளில் விதிமீறல் நடைபெற்று உள்ளதா என ஆய்வு செய்ய புவியியல் மற்றும் சுரங்கத்துறை சார்பில் இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான குவாரியும் உள்ள நிலையில், 16 இடங்களில் சோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 2019-ல் குத்தகைதாரர் செலுத்திய அபராத தொகை சரியாக கணக்கிடப்பட்டதா எனவும் ஆய்வு செய்யப்பட உள்ளது.

2017-ல் பணப்பட்டுவாடா புகாரில் சோதனை, 2018-ல் குட்கா வழக்கில் சிபிஐ சோதனை மற்றும் அண்மையில் சொத்து குவிப்பு வழக்கில் சோதனை என தொடர் புகார்களில் அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சிக்கிவருகிறார்.


Tags : Minister ,Vijayabaskar Quarry , AIADMK ex-minister C. Vijayabaskar quarry irregularities complaint: Vijayabaskar quarry ordered to inspect 16 places
× RELATED கெஜ்ரிவால் கைதுக்கு வாக்கின் மூலம்...