சென்னை: சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு தினசரி ஆயிரக்கணக்கானோர் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர். இந்நிலையில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் மருத்துவமனை ஊழியர்கள் லஞ்சம் கேட்பதாக புகார்கள் எழுந்தது. இது குறித்து மருத்துவமனை டீன் தேரணிராஜன் கவனத்துக்கு புகார்கள் சென்றது. இதையடுத்து, லஞ்சம் பெறும் ஊழியர்களை கண்காணித்து நடவடிக்கை எடுக்கும் வகையில் மருத்துவமனை முழுவதும் புகார் பெட்டிகளை டீன் நிறுவி உள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: ஊழியர்கள் லஞ்சம் பெறுவதாக தொடர்ந்து புகார்கள் வந்தது. இதனை தடுத்து, லஞ்சம் பெறும் ஊழியர்களை கண்காணிக்க சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. லஞ்சம் பெறும் ஊழியர்கள் குறித்து, நேரடியாக வந்து புகார் கொடுக்க நோயாளிகள் தயக்கம் காட்டுகின்றனர். அவர்களுக்காக ‘புகார் பெட்டிகளை’ மருத்துவமனையின் அனைத்து அவசர சிகிச்சை பகுதிகளிலும் நிறுவி உள்ளோம். மொத்தம் 25 இடங்களில் புகார் பெட்டிகள் வைக்கப்பட்டுள்ளது என்றார்.