×

செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழக ஊரக புத்தாக்க திட்டத்தின் கீழ் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு கலெக்டர் ராகுல்நாத் விடுத்துள்ள அறிக்கை. தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம், உலக வங்கி நிதி உதவியுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் திருக்கழுகுன்றம், திருப்போரூர், புனித தோமையார் மலை ஆகிய வட்டாரங்களில் உள்ள 119 ஊராட்சிகளில் செயல்படுத்தப்படுகிறது. இதில் பெண்கள், ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத் திறனாளிகள், இளைஞர்கள், ஆர்வமுள்ள தொழில் முனைவோர்கள், வேளாண் சார்ந்த மற்றும் வேளாண் சாரா துறைகளை சேர்ந்த உற்பத்தியாளர்கள் இணைந்த கூட்டமைப்புகள், பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்டு தொழில் தொடங்க உள்ளனர்.

தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டம் செயல்படுத்தப்படும் வட்டாரங்களில் உள்ள பயனாளிகளுக்கான, சேவையினை அளிக்கும் பொருட்டு, ஓரிட வசதி மையம் தொடங்கப்பட உள்ளது. இம்மையத்தின் வாயிலாக, ஊரக பகுதிகளில் அனைத்து வகையான புதிய மற்றும் மேம்படுத்தப்பட உள்ள தொழில்களுக்கு தேவையான தொழில் திட்டம் தயார் செய்தல், நிதி சேவைகளுக்கு வழி வகுத்தல், தொழில் முனைவு பயிற்சி உள்பட பல செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

இதையொட்டி, இம்மையத்தில் பணியாற்ற தொழில் வளர்ச்சியில் அனுபவமுள்ள முதுகலைப் பட்டம் பெற்ற 40 வயதுக்கு உட்பட்ட மற்றும் கணினி இயக்குவதில் அனுபவம் உள்ளவர்களிடம் இருந்து, ஒரு தொழில் முனைவு மேம்பாட்டு அலுவலர்,  ஒரு தொழில் முனைவு நிதி அலுவலர் ஆகிய பதவிகளுக்குகான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்ப படிவங்கள் மற்றும் தகுதிகள் பற்றிய விபரங்களை www.tnrtp.org என்ற இணைய தளத்தில் அறிந்து கொள்ளலாம்.

இணையதளத்தில் இருந்து விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உரிய ஆவணங்களுடன் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ மாவட்ட அலுவலகத்தில், நவம்பர் 15ம் தேதி, மாலை 5 மணிக்குள் சேர்க்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட செயல் அலுவலர், தமிழ்நாடு ஊரக புத்தாக்க திட்டம், பழைய எண். 37, புதிய எண். 26, அழகேசன் நகர், (தமிழ்நாடு மின்வாரிய அலுவலகம் அருகில்) செங்கல்பட்டு - 603001 என்ற முகவரியில் செயல்படும் மாவட்ட திட்ட அலுவலகத்தை, நேரடியாகவோ  அல்லது 044-27432018 என்ற தொலைபேசி மூலமோ தொடர்பு கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

Tags : Chengalpattu District , Work under Chengalpattu District Tamil Nadu Rural Innovation Project: Applications are welcome
× RELATED பங்குச்சந்தையில் நஷ்டத்தால் விரக்தி...